'அமெரிக்காவின் சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்புகளை முடக்க முற்படுகிறது வடகொரியா'
வடகொரியா, களவாடும் மென்பொருளைக் கொண்டு, அமெரிக்காவின் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளில் ஊடுருவல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக, வாஷிங்டன் எச்சரித்துள்ளது.
குறிப்பாகத் தனது சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்புகளை முடக்க வடகொரியா முற்படுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.
Maui எனப்படும் மென்பொருளைக் கொண்டு அமெரிக்காவின் சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்புகள் கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து ஊடுருவப்பட்டதாக அந்நாட்டின் மத்தியப் புலனாய்வுத் துறையும் நிதி அமைச்சும் தெரிவித்தன.
மருத்துவப் பதிவுகள் போன்ற முக்கியத் தரவுகளைக் களவாடி, அவற்றை விடுவிப்பதற்குப் பிணைத்தொகை கேட்பதாகக் கூறப்படுகிறது.
தடயவியல் முறையில் மேற்கொள்ளப்பட்ட தடங்காணும் சோதனை, வடகொரியா அந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குறிப்பிடுகிறது.
பொதுச் சுகாதாரத்துறை அந்த விவகாரத்தில் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வட கொரியாவுக்கு எதிரான பொருளியல் தடைகள் தொடர்பான சட்டங்களை மீறுவதைத் தவிர்க்க, அதிகாரிகள் பிணைத்தொகையைச் செலுத்தவேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டது.