பாகிஸ்தான் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு: தாக்குதலுக்குப் பொறுப்பேற்க மறுத்த தலிபான்
பாகிஸ்தானின் பெஷாவர் (Peshawar) நகரில் உள்ள பள்ளிவாசலில் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலுக்கு அந்நாட்டுத் தலிபான் அமைப்பு பொறுப்பேற்க மறுத்துவிட்டது.
அந்தக் குழுவைச் சேர்ந்த 2 அதிகாரிகள் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றபோதும் தலிபான் அமைப்பு அதனை நிராகரித்தது.
பாகிஸ்தானின் தலிபான் அமைப்பைத் தோற்றுவித்த உறுப்பினர் காலிட் கொராசானியின் (Khalid Khorasani) மரணத்திற்குப் பதிலடியாகப் பள்ளிவாசல் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அவர்கள் கூறியிருந்தனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆப்கானிஸ்தானில் கொராசானி பயணம் செய்த வாகனம் கண்ணிவெடி வைத்துத் தகர்த்தப்பட்டது.
நேற்று (31 ஜனவரி) பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலில் மாண்டோர் எண்ணிக்கை 61க்கு உயர்ந்திருக்கிறது.
அந்தப் பள்ளிவாசல் காவல்துறைத் தலைமையக வளாகத்திற்கு உள்ளே அமைக்கப்பட்டிருந்தது.
மாண்டோரில் பலர் காவல்துறை அதிகாரிகள்.
150க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.
பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
மதிய நேரத்தில் சுமார் 400 பேர் தொழுகை செய்துகொண்டிருந்தபோது தற்கொலைக் குண்டு வெடித்தது.
பள்ளிவாசலின் சுவர்களும் கூரையின் ஒருபகுதியும் வெடிப்பில் தகர்ந்ததால் பலர் இடிபாடுகளில் சிக்கி மாண்டனர்.