ஆசியா செய்தியில் மட்டும்
'யார் அதிபராக வந்தாலும் பரவாயில்லை... நாடு முன்னேற்றம் கண்டால் போதும்' - பிலிப்பீன்ஸ் வாக்காளர்கள் குறித்து அரசியல் கவனிப்பாளர்
'யார் அதிபராக வந்தாலும் பரவாயில்லை... நாடு முன்னேற்றம் கண்டால் போதும்' என்று பிலிப்பீன்ஸ் மக்களிடையே பொதுவான கருத்து நிலவுவதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
தங்கள் முன்னேற்றத்தைவிட நாட்டின் முன்னேற்றமே முக்கியம் என்று இளையர்கள் கருதுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
தேர்தல் நிலவரம் குறித்து பிலிப்பீன்ஸில் இருக்கும் அரசியல் கவனிப்பாளர் திரு. M.R மோகனிடம் கருத்துக் கேட்டது 'செய்தி'. கடந்த 45 ஆண்டுகளாக அவர் அங்கு வர்த்தகம் செய்கிறார்.
பிலிப்பீன்ஸில் இன்று (9 மே) அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.
65.7 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
தேர்தலில் மொத்தம் 10 பேர் போட்டியிடுகின்றனர்.
அவர்களில் முக்கியமாக இருவருக்கிடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவர், பிலிப்பீன்ஸின் முன்னாள் அதிபரின் மகன் திரு. ஃபெர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியர் (Ferdinand Marcos Junior).
இன்னொருவர், தற்போதைய துணையதிபர் லெனி ரொப்ரெடோ (Leni Robredo).
ஃபெர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியர்
- அவர் முன்னாள் அதிபர் ஃபெர்டினண்ட் ஈ மார்க்கோஸின் (Ferdinand E Marcos) மகன்.
- 1965ஆம் ஆண்டுக்கும் 1986ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட அதிபர் ஃபெர்டினண்ட் ஈ மார்க்கோஸின் ஆட்சி, அதிகக் கண்டனத்துக்கு உள்ளான ஒன்று. 1972ஆம் ஆண்டில், அவர் ராணுவச் சட்டமுறையை நடைமுறைப்படுத்தினார். மார்க்கோஸின் ஆட்சிக்குக் கீழ் அரசியல் அடக்குமுறையும் வன்முறையும் நீடித்தன.
1986ஆம் ஆண்டில் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அவர் நாடு கடந்து வாழ்ந்தார்.
- ஃபெர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியர், 1995-ஆம் ஆண்டில் அரசாங்க அதிகாரியாகச் செயல்பட்டபோது, வரி செலுத்தத் தவறியதன் தொடர்பில் தண்டிக்கப்பட்டார்.
- தம்முடைய ஆட்சியின் கீழ் ஒன்றுபட்ட தலைமைத்துவம் இருக்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
- பிரசாரத்தில் சமூக ஊடகத்தை அதிகம் பயன்படுத்தியது, கருத்துக் கணிப்புகளில் முன்னணி வகிக்கக் காரணமாக அமைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அவர் தந்தையைப் போல் இருப்பாரோ என்று சிலர் அஞ்சுகின்றனர். தந்தையின் பெயரைக் காப்பாற்றுவதற்கே அவர் தேர்தலில் போட்டியிடுகிறார் என்றும் சிலர் கூறுகின்றனர். தாம் ஆட்சிக்கு வந்தால், துறைகள் மேம்படும் என்றும் வளர்ச்சி கிடைக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்,
என்று திரு. மோகன் சொன்னார்.
லெனி ரொப்ரெடோ
- முன்னாள் வழக்கறிஞர், மனித உரிமை ஆர்வலர்
- 2016-ஆம் ஆண்டிலிருந்து துணையதிபராகச் செயல்படுகிறார். அத்தேர்தலில் அவர் ஃபெர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியருக்கு எதிராகப் போட்டியிட்டு, வெற்றி பெற்றார்.
- அவர் தற்போதைய அதிபர் ரோட்ரிகோ டுட்டார்ட்டேயின்(Rodrigo Duterte) கடும் விமர்சகர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.
- தாம் ஆட்சிக்கு வந்தால் அரசாங்கம் வெளிப்படையாக இருக்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
- லெனி ரொப்ரெடோ, நாட்டின் செல்வந்தர்களுடைய விருப்பங்களைப் பிரதிபலிப்பதாகச் சிலர் குறைகூறுகின்றனர். அவரது மிதவாதக் கட்சி, செல்வாக்குமிக்க, பணக்காரக் குடும்பங்களுடன் அதிகத் தொடர்புகளைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுவது வழக்கம்.
- வெற்றி பெற்றால், அந்நாட்டில் ஆட்சிக்கு வந்த மூன்றாது பெண் என்ற பெருமை அவரைச் சேரும்.
அவரது ஆட்சியில் ஊழல் இருக்காது... அவர் சுயநலமின்றி, நாட்டின் முன்னேற்றத்தைப் பற்றி யோசிப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். துணையதிபராக அவர் மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு சில திட்டங்களை அறிமுகம் செய்தார்,
என்று திரு. மோகன் கூறினார்.
இவ்வாண்டுத் தேர்தலில் 4 மில்லியன் புதிய வாக்காளர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.
'லட்சிய மனப்பான்மையைக் கொண்ட இளையர்களுக்கு' நாட்டில் நல்ல ஒரு மாற்றம் ஏற்படவேண்டும் என்பது முக்கிய எண்ணமாக உள்ளது என்று திரு. மோகன் கூறினார்.