மலேசியாவின் புதிய பிரதமரைச் சிங்கப்பூருக்கு வரவேற்கும் பிரதமர் லீ
மலேசியாவின் 10ஆவது பிரதமராகப் பதவியேற்ற திரு. அன்வார் இப்ராஹிமைச் சிங்கப்பூருக்கு வரும்படிப் பிரதமர் லீ சியென் லூங் அழைப்பு விடுத்திருக்கிறார்.
திரு. அன்வாரைத் தொலைபேசி வழி வாழ்த்தியபோது அந்த அழைப்பை விடுத்ததாகப் பிரதமர் லீ கூறினார்.
சிங்கப்பூரும் மலேசியாவும் நெருங்கிய நட்பு நாடுகள் என்று தமது Facebook பக்கத்தில் பதிவுசெய்த திரு. லீ, இரு நாடுகளும் நீண்டகால உறவைக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.
இரு நாட்டிற்கும் இடையே ஆழமான வரலாற்று, கலாசார உறவுகள் இருப்பதாக அவர் கூறினார்.
இருதரப்பும் பயனடையும் வகையில் உறவை மேம்படுத்துவதற்கு இன்னும் நிறையச் செய்யலாம் என்றார் பிரதமர் லீ.
இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த திரு. அன்வாருடனும் புதிய அரசாங்கத்துடனும் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துக் காத்திருப்பதாகப் பிரதமர் லீ கூறினார்.