'அன்வார் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்' - முன்னாள் பிரதமர் முஹிதின் யாசின்
மலேசிய அரசாங்கத்தை வழிநடத்தத் தமக்குப் பெரும்பான்மை இருப்பதைத் திரு அன்வார் இப்ராஹிம் நிரூபிக்கவேண்டும் என்று முன்னாள் பிரதமர் முஹிதின் யாசின் கூறியிருக்கிறார்.
மலேசியாவின் 15ஆவது பொதுத்தேர்தல் அண்மையில் நடந்துமுடிந்தது.
அதில் திரு அன்வாரின் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி 81 இடங்களைக் கைப்பற்றியது.
திரு முஹிதின் யாசின் தலைமை வகிக்கும் பெரிக்கத்தான் நேசனல் கூட்டணி 73 இடங்களின் வென்றது.
நாடாளுமன்றப் பெரும்பான்மையான 112 உறுப்பினர்களை எந்தக் கூட்டணியும் பெறவில்லை.
அதையடுத்து யார் யாருடன் இணைந்து அந்த எண்ணிக்கையை எட்டுவது என்பதில் இழுபறி நீடித்தது.
மலேசிய மாமன்னர் கூட்டணிகள், கட்சிகள், மலேசிய அரசர்கள் ஆகிய தரப்புகளுடன் கலந்துபேசிப் பின் இன்று திரு அன்வாரைப் பிரதமராக அறிவித்தார்.
தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களின் ஆதரவு தமக்கு இருப்பதைத் திரு அன்வார் காட்டவேண்டும் என்றார் திரு முஹிதின்.
மக்களின் நம்பிக்கையைப் பெற அது அவசியம் என்றார் அவர்.
"நேற்று முன் தினம் நாடாளுமன்ற நாயகர் கடிதம் ஒன்றை விடுத்திருந்தார்"
"அதில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான செயல்முறையை அவர் குறிப்பிட்டிருந்தார்"
"பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் உறுதிமொழியைச் சமர்ப்பித்தால் அதை நிரூபிக்கலாம்"
என்றார் திரு முஹிதின்.
திரு அன்வார் பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொள்வதற்கு முன்னர் நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் திரு முஹிதின் அதனைத் தெரிவித்தார்.