தேர்தல் தோல்வி எதிரொலி - பதவி விலகுகிறாரா ராகுல் காந்தி?
இந்தியப் பொதுத் தேர்தலில் தான் எதிர்பார்த்த முடிவுகளை பெறத் தவறியுள்ளது காங்கிரஸ் கட்சி.
இந்தியப் பொதுத் தேர்தலில் தான் எதிர்பார்த்த முடிவுகளை பெறத் தவறியுள்ளது காங்கிரஸ் கட்சி.
அதனைத் தொடர்ந்து அந்தக் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று தமது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக கட்சியின் பணிக்குழு இந்திய நேரப்படி காலை 11 மணிக்கு சந்திக்கவுள்ளது.
அப்போது திரு. காந்தி பதவி விலகலைச் சமர்ப்பிப்பார் என்று கூறப்படுகிறது.
ஆனால் அவரின் பதவி விலகலை காங்கிரஸ் பணிக் குழு ஏற்றுக்கொள்ளுமா என்பதே இப்போதைய கேள்வி.
இந்திய நாடாளுமன்றத்தின் 542 இடங்களில் பாரதிய ஜனதாக் கட்சி இம்முறை 303 இடங்களைக் கைப்பற்றியது. எதிர்த்தரப்பு காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் வென்று பின்தங்கிவிட்டது.
திரு. காந்தி போட்டியிட்ட அமேதி தொகுதியில் பாரதீய ஜனதாவின் ஸ்மிருதி இரானி வெற்றிபெற்றார். அது காங்கிரஸ் கட்சிக்குப் பலத்த பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஆனால், கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட திரு. காந்தி வெற்றி பெற்றார்.
உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ளது அமேதி தொகுதி.
1960களிலிருந்து அங்கு காங்கிரஸ் கட்சியே வென்று வந்துள்ளது.
2004ஆம் ஆண்டிலிருந்து திரு. காந்தி அமேதியில் போட்டியிட்டு வந்தார்.
காங்கிரசுக்கு இது மீளமுடியாத தோல்வி என்று அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
எதிர்காலத்தில் கட்சியின் நடவடிக்கை எப்படி அமைய வேண்டும் என்பது இன்று நடக்கவிருக்கும் பணிக்குழு சந்திப்பின்போது முடிவு செய்யப்படலாம்.