'சபா மக்கள் கூட்டணி மலேசியாவின் ஒற்றுமை அரசாங்கத்துடன் இணையும்' - பிரதமர் அன்வார்
சபா மக்கள் கூட்டணி (GRS) மலேசியாவின் ஒற்றுமை அரசாங்கத்துடன் இணையும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கிறார்.
அதையடுத்து நாடாளுமன்றத்தில் அவரது அரசாங்கம் மூன்றில் இரு பகுதி பெரும்பான்மை பெறும்.
அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று அவர் சொன்னார்.
அமைச்சரவை உறுப்பினர்களிடம் தங்களது சம்பளங்களைக் குறைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.
அது குறித்துப் பேச்சு நடைபெறுவதாய் அவர் கூறினார்.
அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிப்பது அவரது அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்கும் என்பதைத் திரு அன்வார் வலியுறுத்தினார்.
மலேசியாவில் நவம்பர் 19ஆம் தேதி தேர்தல் நடந்தது.
அதில் எந்த ஒரு கூட்டணியும் பெரும்பான்மை இடங்களைப் பெறவில்லை.
அரசாங்கத்தை அமைக்க நாடாளுமன்றத்தின் 222 இடங்களில் 112 இடங்களின் ஆதரவு தேவை.
பக்கத்தான் ஹரப்பானையும் பெரிக்கத்தான் நேசனலையும் ஒன்றிணைத்து கூட்டு அரசாங்கத்தை உருவாக்குமாறு மலேசிய மாமன்னர் கேட்டுக் கொண்டார்.
ஆனால் பெரிக்கத்தான் நேசனல் அதனை நிராகரித்தது.
பின் மலாய் அரசர்களுடன் பேச்சு நடத்திய மாமன்னர், திரு அன்வாரைப் பிரதமராக்குவதாக அறிவித்தார்.
திரு அன்வார் அனைத்துக் கட்சிகளுடன் ஒன்றிணைந்து நாட்டை வழிநடத்தத் தயாராக இருப்பதாய்க் கூறியிருக்கிறார்.
அடுத்த நாடாளுமன்றக் கூட்டம் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெறும்.