தூக்கத்தில் நடந்து மாடியிலிருந்து விழுந்த மாது
சீனாவின் ஜியாங்ஸி (Jiangxi) மாவட்டத்தில் மாது ஒருவர் தூக்கத்தில் நடந்து மாடியிலிருந்து விழுந்துவிட்டார். நல்லவேளையாக அது கீழ்த்தளத்தின் மேற்கூரை.
ஆனால் மாது ஈரமாக இருந்த மேற்கூரையில் விழுந்தபின் தம்மை அறியாமல் உறங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பாளர்கள் மாதைப் பத்திரமாக மீட்டனர்.
அவருக்குக் கை, கால்களில் லேசாக அடிபட்டிருக்கிறது. ஆனால் விழுந்த நினைவே இல்லை என்கிறார் மாது. 'எழுந்தபோது இங்கிருந்தேன்' என்கிறார்.
அது குறித்த செய்தி சீன ஊடகங்களில் வெளியானது.
அவருக்கு அக்கறை தெரிவித்த இணையவாசிகள் தூக்கத்தில் நடக்கும் வியாதி குறித்து அதிகம் பேசத் தொடங்கியுள்ளனர்.
உயரமான மாடியில் வசிக்கும் சிலருக்கு அச்சம் கிளம்பியிருக்கிறது. இப்படி ஒரு நோய் தங்களுக்கு இருந்தால் என்னவாகும் என்று பலர் பதற்றமாகக் கருத்துரைத்துள்ளனர்.
தூக்கத்தில் நடக்கும் பிரச்சினைக்கு somnambulism என்று பெயர்.
பாதிக்கப்பட்டவர்கள், ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழிப்பதற்கு முந்தைய நிலையில் இவ்வாறு நடக்க வாய்ப்பிருப்பதாக மருத்துவ சஞ்சிகைகள் கூறுகின்றன.
நடப்பவர்களுக்கு அது நினைவில் இருப்பதில்லை. மேலும் அந்த நேரத்தில் ஒருவர் கேட்பதற்கு அவர்கள் பதிலளிப்பதும் சாத்தியமில்லை. சிலர் தூக்கத்தில் நடந்துகொண்டே பேசுவதுண்டு. ஆனால் அது அர்த்தமற்ற வார்த்தைகளாக இருக்கும்.
இது பெரும்பாலும் பாரம்பரியத்தில் வரும் நோய் என்று கூறப்படுகிறது.