சுமத்ரா நிலநடுக்கத்தில் இருவர் மரணம்; இந்தோனேசியாவின் பக்கத்து நாடுகளில் அதிர்வுகள் உணரப்பட்டன
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் வடக்கே ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருவர் மாண்டதாகத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை சுமார் 9.40 மணியளவில் 6.2 ரிக்டர் நிலநடுக்கம் சுமத்ராவின் சில பகுதிகளை உலுக்கியது. அது 10 கிலோமீட்டர் ஆழத்திலிருந்து தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இந்தோனேசியாவின் பக்கத்து நாடுகளில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. நிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமிப் பேரலை ஏற்படுவது குறித்து எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
மலேசியாவின் கோலாலம்பூர் மாநிலத்தில் சில பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மிக அதிகமாக உணரப்பட்டதால் சிலர் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
ஆனால் அங்கு யாரும் காயமடைந்ததாகவோ கட்டடங்கள் சேதமடைந்ததாகவோ தகவல் இல்லை.