அதிர்ஷ்டக் குலுக்கில் பணம் வென்றபின் மற்றொருவரைத் திருமணம் செய்த பெண்...அதிர்ச்சியடைந்த கணவர்...
தாய்லந்தைச் சேர்ந்த 47 வயது நரின் (Narin) எனும் ஆடவர் தம் மனைவி அதிர்ஷ்டக் குலுக்கில் 12 மில்லியன் பாட் தொகையை வென்றபின் மற்றொருவரைத் திருமணம் செய்ததை அறிந்து அதிர்ச்சியடைந்ததாக NDTV தெரிவித்தது.
அதைத் தொடர்ந்து அவர் தம் மனைவியின்மீது வழக்குத் தொடுத்ததாக Thaiger செய்தி நிறுவனம் தெரிவித்தது.
நரின், சாவீவான் (Chaweewan) என்ற தன் மனைவியை 20 ஆண்டுகளுக்கு முன்பு மணம் முடித்ததாகவும் அவர்களுக்கு 3 மகள்கள் உள்ளதாகவும் NDTV தெரிவித்தது.
நரினுக்குக் கடன் பிரச்சினைகள் இருந்ததால் அவர் தென்கொரியாவிற்கு வேலைக்காகச் சென்றார்.
ஒவ்வொரு மாதமும் தன் குடும்பத்துக்கு அங்கிருந்து பணத்தை அனுப்பி வந்தார்.
முதலில் தன் கணவருடன் தென்கொரியாவுக்குச் சென்ற சாவீவான், பின்னர் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வதற்குத் தாய்லந்துக்குத் திரும்பினார்.
அதன்பின் தான் தன் மனைவி அதிர்ஷ்டக் குலுக்கில் பணம் வென்றதை அறிந்தார் நரின்.
மனைவியைத் தொடர்புகொள்ளப் பலமுறை முயற்சி செய்தும் முடியாதபோது தாய்லந்துக்குத் திரும்பினார் அவர்.
அப்போதுதான் சாவீவான் ஒரு காவல்துறை அதிகாரியைத் திருமணம் செய்துகொண்டதை அறிந்தார்.
இந்த எதிர்பாராத ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று கூறினார் நரின்.
"ஒவ்வொரு மாதமும் தவறாமல் நான் என் மனைவிக்குப் பணம் அளித்து வந்தேன். அதனால் என்னிடம் கொஞ்சப் பணம் தான் உள்ளது. எனக்கு உரிய பணத்தையும் நியாயத்தையும் கேட்டு நான் போராடுவேன்!" என்றார் நரின்.
அதிர்ஷ்டக் குலுக்கில் வென்று காதலரைத் திருமணம் செய்ததற்குப் பல வருடங்கள் முன்பே நரினைப் பிரிந்ததாகச் சாவீவான் கூறினார்.
நரினோ அந்தப் பிரிவைப் பற்றித் தனக்குத் தெரியாது என்று கூறுகிறார்.
சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.