'மியன்மார் மக்களுக்கு ஜனநாயக உரிமை வேண்டும்' - ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மூத்த அதிகாரி கோரிக்கை
மியன்மார் மக்களுக்கு ஜனநாயக உரிமையை வழங்குமாறு, ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மூத்தத் தூதர் நோலீன் ஹெய்சர் (Noeleen Heyzer), அந்நாட்டு ராணுவத் தலைவர் மின் ஆங் லைனிடம் (Min Aung Hlaing) தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு இருவருக்கும் இடையில் நடந்த முதல் சந்திப்பில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.
எல்லா அரசியல் கைதிகளையும் விடுவிக்கும்படியும் ஜனநாயக ஆர்வலர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என்றும் திருவாட்டி ஹெய்சர் கேட்டுக்கொண்டார்.
மியன்மார் தலைநகர் நேப்பிடாவில் அந்தச் சந்திப்பு நடைபெற்றது.
ஐக்கிய நாட்டு நிறுவனம், மியன்மாரின் ராணுவத்துடன் தொடர்பில் இருப்பது, அதனை அங்கீகரிப்பதாகப் பொருள்படமாட்டாது என்று திருவாட்டி ஹெய்சர் குறிப்பிட்டார்.
நாட்டின் அரசியல் நெருக்கடி மேம்படுவதற்கு, அனைத்துத் தரப்பினரையும் ஈடுபடுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பதவியிலிருந்து நீக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi) அதில் முக்கியமானவர் என்று கூறிய திருவாட்டி ஹெய்சர் அவரைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தார்.
திருவாட்டி சூச்சியின் உடல்நிலை குறித்து அவர் ஆழ்ந்த அக்கறை தெரிவித்தார்.
திருவாட்டி ஹெய்சர் மியன்மாருக்குச் செல்வதற்கு முதல்நாள், திருவாட்டி சூச்சிக்கு ஊழல் குற்றச்சாட்டுகளின் தொடர்பில், 6 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
-AFP