பெய்ச்சிங்-குளிர்கால ஒலிம்பிக் போட்டியைப் புறக்கணிக்கக் கோரி இந்தோனேசியாவில் ஆர்ப்பாட்டம்
இந்தோனேசியாவில் பெய்ச்சிங்-குளிர்கால ஒலிம்பிக் போட்டியைப் புறக்கணிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.
ஜக்கர்த்தாவில் உள்ள சீனத் தூதரகத்துக்கு வெளியே சிலர் அணிவகுத்தனர்.
சின்ஜியாங் (Xinjiang) வட்டாரத்தில் சிறுபான்மை வீகர் முஸ்லிம்களுக்கு எதிரான சீனாவின் நடவடிக்கையைக் கண்டித்து இந்தோனேசியா குளிர்கால ஒலிம்பிக் போட்டியைப் புறக்கணிக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர்.
இந்தோனேசியா ஒருபோதும் குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்றதில்லை.
என்றாலும் இந்தோனேசியாவும் மற்ற நாடுகளும் அந்தப் போட்டியைப் புறக்கணிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
அமெரிக்கா, பிரிட்டன், பெல்ஜியம், நெதர்லந்து, கனடா ஆகியவை சிறுபான்மை வீகர்களுக்கு எதிரான பெய்ச்சிங்கின் கொள்கைகள் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் எனக் கூறியுள்ளன.
சுமார் ஒரு மில்லியன் வீகர்கள் சீனாவில் உள்ள முகாம்களில் வசிக்கின்றனர்.
ஆனால் அவை கல்வி, வேலைப் பயிற்சி நிலையங்கள் என்று சீனா கூறுகிறது.
பயங்கரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் முறியடிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் பெய்ச்சிங் தெரிவித்தது.