சீனப் புத்தாண்டையொட்டி சைனாடவுனில் கூடுதலான பாதுகாப்பு இடைவெளித் தூதர்கள்
சீனப் புத்தாண்டு வரையிலான வார இறுதி நாள்களில் சைனாடவுனில் மேலும் அதிகமான பாதுகாப்பு இடைவெளித் தூதர்கள் பணியில் இருப்பர்.
சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் இன்று அதனைத் தெரிவித்தது.
நாளை (ஜனவரி 16) வரையிலான வார இறுதி, அடுத்த வார இறுதி, இம்மாதம் 28ஆம் முதல் 31ஆம் தேதிவரையிலான நீண்ட வார இறுதி நாள்களில் கூடுதல் அதிகாரிகள் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருப்பர்.
தேவைப்பட்டால் உச்சநேரத்தின்போது கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நியூ பிரிட்ஜ் ரோட்டிலிருந்து (New Bridge Road) பகோடா ஸ்டிரீட்டுக்குச் (Pagoda Street) செல்லும் பாதசாரிகளுக்கான நடைபாதை மூடப்படுவது அவற்றுள் ஒன்று.
டெம்ப்பிள் ஸ்ட்ரீட்டை (Temple Street) வாகனப் போக்குவரத்துக்கு மூடுவது மற்றொரு நடவடிக்கை.
கடைகளும் உணவகங்களும் வரம்புமீறி நடைபாதையை ஆக்கிரமிப்பதைத் தவிர்க்கவேண்டும்.
அது வருகையாளர்களுக்கு இடையே பாதுகாப்பான இடைவெளி இருப்பதைச் சிரமத்துக்கு உள்ளாக்கும்.
குறிப்பாக நியூ பிரிட்ஜ் ரோடு, பகோடா ஸ்டிரீட், திரெங்கானு ஸ்ட்ரீட் ஆகிய இடங்களில் அவ்வாறு ஏற்பட அதிகச் சாத்தியமுள்ளதாகக் கழகம் குறிப்பிட்டது.
கூட்டத்தைத் தவிர்க்க பொதுமக்கள் சீனப் புத்தாண்டுப் பொருள்களை இணையத்தில் வாங்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.