மலேசியா: 100 காவல்துறை அதிகாரிகள் போதைப்பொருள் உட்கொண்டது சோதனைகளில் தெரிய வந்துள்ளது
கோலாலம்பூர்: நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் போதைப்பொருள் உட்கொண்டதாகத் தெரிய வந்துள்ளது என மலேசியக் காவல்துறையின் தலைமையதிகாரி அப்துல் ஹமீட் பாடோர் தெரிவித்திருக்கிறார்.
கோலாலம்பூர்: நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் போதைப்பொருள் உட்கொண்டதாகத் தெரிய வந்துள்ளது என மலேசியக் காவல்துறையின் தலைமையதிகாரி அப்துல் ஹமீட் பாடோர் தெரிவித்திருக்கிறார்.
ஒவ்வொரு காவல்துறை அணியிலும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
போதைப்பொருள் உட்கொண்ட அதிகாரிகளின் எண்ணிக்கை தமக்கு அதிர்ச்சியளிப்பதாகத் திரு. அப்துல் ஹமீட் குறிப்பிட்டார்.
பல்வேறு வகையான போதைப்பொருளை அவர்கள் உட்கொண்டிருந்தனர். காவல்துறையில் போதைப்புழக்கம் ஆபத்தான, கடுமையான அளவில் இருப்பதை அது உணர்த்துவதாக அவர் சொன்னார்.
இம்மாதம் 13ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை சோதனைகள் நடத்தப்பட்டன.
சுமார் 30 அதிகாரிகள் இவ்வாண்டு கைது செய்யப்பட்டதாகக் காவல்துறைத் தலைமையதிகாரி முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
அவர்களில் பலர் ஐஸ் போதைப்பொருளை உட்கொண்டிருந்தனர்.
சட்டத்தை நிலைநாட்டும் பொறுப்பை ஏற்றுள்ள காவல்துறை அதிகாரிகளே அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நாட்டின் நிலைமை என்ன என்று திரு. அப்துல் ஹமீட் வினவினார்.
பொதுமக்களைப் போன்றே அவர்களும் சட்ட நடைமுறைக்கு உட்பட வேண்டும் என்றார் அவர். காவல்துறையின் புலனாய்வையும் பின்னர் நீதிமன்ற நடவடிக்கையையும் அவர்கள் எதிர்கொள்ளவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.