வீட்டுக்கு வெளியில் நாயுடன் தனித்துவிடப்பட்ட பணிப்பெண் மரணம்
மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில், முதலாளிகளால் வதைக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தோனேசியப் பணிப்பெண் மாண்டார்.
மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில், முதலாளிகளால் வதைக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தோனேசியப் பணிப்பெண் மாண்டார்.
21 வயது அடெலினா, இன்று பிற்பகல் மருத்துவமனையில் மாண்டதாக 'டனாகனிட்டா' - குடியேறி உரிமைக்குழு தெரிவித்துள்ளது.
மரணத்துக்கான காரணம் பிரேதப் பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்படும் என்றும் அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது.
பணிப்பெண்ணை வதைத்த முதலாளிகள் கொலைக் குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் சகோதரர்கள் எனக் காவல்துறையினர் கூறினர்.
{கோப்புப் படம்}
பணிப்பெண்ணைப் பற்றிய தகவல் கிடைத்ததும் அதிகாரிகள், அவர் வேலை செய்த இடத்திற்குச் சென்றனர். அப்போது அவருடைய முகம், கை, கால் ஆகிய அங்கங்களில் காயங்கள் இருந்ததாகத் தெரிகிறது.
அபாயமான இரசாயனத்தைப் பயன்படுத்துமாறு பணிப்பெண்ணை அவருடைய முதலாளிகள் கட்டாயப்படுத்தினர். ஒரு மாதத்திற்கு மேலாக அந்தப் பெண், நாயுடன் வீட்டுக்கு வெளியே உறங்கக் கட்டாயப்படுத்தப்பட்டார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.