100வது துணைக்கோளத்தை வெற்றிகரமாக விண்ணில் பாய்ச்சிய இந்தியா
இந்தியா வெற்றிகரமாக அதன் 100வது துணைக்கோளத்தை விண்வெளியில் பாய்ச்சியுள்ளது.
புதுடில்லி: இந்தியா வெற்றிகரமாக அதன் 100வது துணைக்கோளத்தை விண்வெளியில் பாய்ச்சியுள்ளது.
ISRO எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வுத் துறை அதனைத் தெரிவித்தது.
Cartosat-2 என்னும் பெயர் கொண்ட துணைக்கோளம், PSLV-C40 வகை உந்துகணையின் மூலம் இன்று காலை விண்ணில் ஏவப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டா என்னுமிடத்திலுள்ள சதீஷ் தவன் விண்வெளி நிலையத்திலிருந்து இன்று (ஜனவரி 12) அந்த உந்துகணை விண்ணில் பாய்ந்தது.
Cartosat-2 உடன், இரண்டு இணைத் துணைக்கோளங்கள், ஆறு நட்பு நாடுகளின் 28 சிறு துணைக்கோளங்கள் ஆகியவை-ஒன்றாக விண்ணில் பாய்ச்சப்பட்டன.
அவை, அமெரிக்கா, கனடா, ஃபின்லந்து, ஃபிரான்ஸ், தென்கொரியா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்குச் சொந்தமானவை.
இந்தியாவைக் காட்டிலும் விண்வெளித் தொழில்நுட்பத்தில் அதிக முன்னேற்றம் கண்டுள்ள நாடுகளும்கூட, குறைந்த செலவு காரணமாக இந்திய உந்துகணை மூலம் தங்களுடைய துணைக்கோளங்களை விண்ணில் பாய்ச்சி வருகின்றன.
100வது துணைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது பெருமைமிகு சாதனை என்று Twitterஇல் குறிப்பிட்டார் திரு மோடி.
அதுகுறித்து ஒவ்வோர் இந்தியரும் பெருமை கொள்ளலாம் என்றார் இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த்.
தற்போது இந்தியாவின் விண்வெளி ஆய்வுத் திட்டத்திற்காக 4 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன் ஆக அண்மை முயற்சி 300 பில்லியன் டாலர் மதிப்புள்ள அனைத்துலக விண்வெளித் துறையில், இந்தியா இன்னும் மேம்பட்ட பங்கை வகிக்க உதவும்.
விண்வெளிக்கு அனுப்பிய தனது துணைக்கோளங்களை எல்லைப் பாதுகாப்புப் பணிகளுக்காக இந்தியா பயன்படுத்தும்.
பாக்கிஸ்தான், சீனா, பங்களாதேஷ், இலங்கை, நேப்பாளம் ஆகிய அண்டை நாடுகளின் இராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிக்க அவை உதவும்.
உலக அளவில், குறைந்த கட்டணத்தில் துணைக்கோளங்களை விண்ணுக்கு ஏவும் தலைசிறந்த நாடாக இந்தியாவை உருவாக்க,
இந்தியப் பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார்.