இந்திய இளம்பெண்ணுக்குப் பாலியல் துன்புறுத்தல் - ஆளுங்கட்சியைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது
இந்தியாவில் இளம்பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதன் தொடர்பில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒருவரை மத்தியப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
புதுடில்லி: இந்தியாவில் இளம்பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதன் தொடர்பில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒருவரை மத்தியப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அதையடுத்து பாலியல் துன்புறுத்தலைக் கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன.
உத்தரபிரதேச மாநிலம் உன்னா நகரில் 17 வயது இளம் பெண்ணை ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி உறுப்பினர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
ஓராண்டுக்கு முன்னர் நடந்த அந்தக் கொடூரத்துக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர் மாநில முதலமைச்சர் வீட்டுக்கு முன்னே தற்கொலைக்கு முயன்றபிறகே ஆளுங்கட்சி உறுப்பினர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அதே வழக்கின் தொடர்பில் குல்தீப் சிங் செங்கர் என்பவரைக் கைது செய்துள்ளதாக மத்தியப் புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, ஜம்மு காஷ்மீரில் எட்டு வயதுச் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டது இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி காப்பாற்ற முயல்கிறது என்று மக்கள் கொந்தளித்து வருகின்றனர். இதனால் பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்துக்கு நெருக்குதல் அதிகரித்துள்ளது.