சீனாவின் பிரதமராக லீ கச்சியாங் மீண்டும் தேர்வு
சீனாவின் பிரதமராகத் திரு. லீ கச்சியாங் (Li Keqiang) மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சீனாவின் பிரதமராகத் திரு. லீ கச்சியாங் (Li Keqiang) மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுமார் மூவாயிரம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட வாக்களிப்பில் திரு. லீக்கு எதிராக 2 வாக்குகள் மட்டுமே பதிவாயின.
கிராமப் பகுதியில் கூலித் தொழிலாளியாக இருந்த திரு. லீ, மாநிலக் கட்சித் தலைவராக வளர்ச்சி கண்டார்; இப்போது நாட்டின் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்கிறார். கடந்த 5 ஆண்டுகளாகத் தொழில்முனைப்பு, புத்தாக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
சீனாவின் நிதிக் கட்டமைப்பில் நெருக்கடிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்; அதற்கான முயற்சியைத் தொடர்ந்து எடுக்கப்போவதாகவும் இந்த ஆண்டுப் பொருளியல் வளர்ச்சியை நிலையாக வைத்திருக்கப்போவதாகவும் சென்ற வாரம் திரு. லீ கூறியிருந்தார்.
இதற்கிடையே சீனாவின் ஊழல் எதிர்ப்பு அமைப்பான தேசிய மேற்பார்வை ஆணையத்தின் தலைவராகத் திரு. யாங் ஸியாவ்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவிக்கு அவர் மட்டும்தான் முன்மொழியப்பட்டிருந்தார்.
சீனாவின் தலைமை நீதிபதியாகத் திரு. சுவோ சியாங் தேர்ந்தெடுக்கப்பட்டார். திரு. சாங் ஜுன் நாட்டின் தலைமை அரசாங்கத் தரப்பு வழக்குரைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திரு. சீ ஜின்பிங் மீண்டும் சீனாவின் அதிபராக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.