மலேசியா: இரண்டு வயது சிறுமியைப் பிணைபிடித்த ஆடவர்
மலேசியாவின் சாபா மாநிலத்தில், ஆடவர் ஒருவர் இரண்டு வயது சிறுமியைப் பிணைபிடித்து வைத்துள்ளார்.
மலேசியாவின் சாபா மாநிலத்தில், ஆடவர் ஒருவர் இரண்டு வயது சிறுமியைப் பிணைபிடித்து வைத்துள்ளார்.
நேற்று மதியம் அங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடம் ஒன்றில் அந்தச் சம்பவம் நடந்தது.
அந்த அடுக்குமாடிக் கட்டடத்தின் நான்காவது தளத்திற்குச் சென்ற ஆடவர், அங்கு நடைபாதையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியைக் கத்தி முனையில் பிடித்து வைத்துக்கொண்டார்.
30வயது நிரம்பிய அந்த ஆடவர், அந்த சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு, அவளைக் கட்டடத்திலிருந்து கீழே எறிந்துவிடப் போவதாக, அங்குள்ளவர்களை மிரட்டினார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ஐந்து மணி நேரம் கழித்து, அந்த ஆடவரைச் சுட்டுக் கொன்று, சிறுமியை உயிருடன் மீட்டனர்.
பெயர் குறிப்பிடப்படாத அந்தச் சிறுமிக்குக் கழுத்தில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில், அந்தச் சந்தேக நபர், அப்பகுதியில் வாழ்பவர் அல்ல என்ற தகவல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.