Air India Express விமான விபத்து: விசாரணை ஆரம்பம்
இந்தியாவின் கேரள மாநிலம், கோழிக்கோடு விமான நிலையத்தில் நேர்ந்த விமான விபத்து குறித்து விசாரணை தொடங்கியுள்ளது.
இந்தியாவின் கேரள மாநிலம், கோழிக்கோடு விமான நிலையத்தில் நேர்ந்த விமான விபத்து குறித்து விசாரணை தொடங்கியுள்ளது.
நேற்று முன்தினம் துபாயிலிருந்து கோழிக்கோடு திரும்பிய Air India Express விமானம் ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்று விபத்துக்குள்ளானது.
பயணிகள் 190 பேரும், சிப்பந்திகளும் விமானத்தில் இருந்தனர். தரையிறங்கும்போது விமானம் இரண்டாக உடைந்ததில் விமானிகள் இருவர் உட்பட 18 பேர் மாண்டனர். விமானத்தின் தகவல் பதிவுப் பெட்டியைப் புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
விபத்துக்கு முன்னர், விமானி இரண்டு முறை, விமானத்தைத் தரையிறக்க முயன்றதாக இந்திய விமானப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறினர்.
கோழிக்கோடு அனைத்துலக விமான நிலையம், மலைப்பாங்கான சமவெளியில் அமைந்துள்ளது.
கடுமையான மழை பெய்திருந்ததால், பாதுகாப்பாய் தரையிறக்கும் விமானியின் முயற்சி சாத்தியமாகவில்லை.
விபத்து நடக்க மனிதத் தவறு காரணமா? அல்லது இயந்திரக் கோளாறு காரணமா? என்பதை விசாரணையின் முடிவு வெளிச்சத்துக்குக் கொண்டு வரும்.
விசாரணையில் கிடைக்கும் தகவல்களை அனைத்துலகப் புலனாய்வாளர்களிடமும், போயிங் விமானத் தயாரிப்பு நிறுவனத்திடமும் பகிர்ந்து கொள்ளப் போவதாக இந்திய விமானப் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.