மலேசியா: அமோனியா வாயுக் கசிவால் 2 பேர் மரணம், 19 பேர் காயம்
மலேசியாவின் ஷா அலாம் நகரத்தில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டு இருவர் மாண்டனர், 19 பேர் காயமடைந்தனர்.
மலேசியாவின் ஷா அலாம் நகரத்தில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டு இருவர் மாண்டனர், 19 பேர் காயமடைந்தனர்.
நேற்றுக் காலை(ஆகஸ்ட் 13) 5.30 மணிக்கு 27 ஊழியர்கள் வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டதாக சிலாங்கூர் சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் காலிட் இப்ராஹிம் (Khalid Ibrahim) உறுதிப்படுத்தினார்.
சம்பவத்தில் காயமுற்ற 19 ஊழியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 6 ஊழியர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர். இருப்பினும் அவர்கள் அமோனியா வாயுவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பதை அறிய சோதனை மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த 2 ஊழியர்கள் அந்த அசம்பாவிதத்தில் மாண்டனர்.
அமோனியா வாயுவை நுகர்ந்ததால் அது நேர்ந்திருக்கக்கூடும் என்று நம்புவதாக தீயணைப்பு, மீட்புத் துறை அதிகாரி அஸ்மெல் கமருடின் (Azmel Kamarudin) கூறினார்.
அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்ட இடத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரம் வரை குடியிருப்பாளர்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாகத் திரு. அஸ்மெல் கூறினார்.
அந்தத் தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிவுச் சம்பவம் நிகழ்ந்திருப்பது இது இரண்டாம் முறை.