மலேசியாவுக்குப் புதிய விடியல் : திரு அன்வார்
முதலில் சீர்திருத்தங்கள் ஆக்ககரமாகச் செயல்படுத்தப்படுவதற்கு அவருக்கும் டாக்டர் வான் அஸிஸாவுக்கும் தேவையான அனைத்து ஆதரவையும் தாம் வழங்கப் போவதாகத் திரு அன்வார் கூறினார்.
மலேசியாவுக்குப் புதிய விடியல் புலர்ந்துள்ளதாகத் திரு அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர், தம் இல்லத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசினார்.
மலேசியாவின் மாமன்னரிடமிருந்து முழு அரசபூர்வ மன்னிப்பு பெற்ற 70 வயது திரு அன்வார், செராஸ் மருத்துவமனையிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டார்.
மாமன்னரைச் சந்தித்த பிறகு தமது விடுதலைக்காகப் போராடிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார் திரு அன்வார்.
குற்றத்திலிருந்து விடுபட மன்னிப்புக் கோரவில்லை; அதிகார முறைகேடு நடந்துள்ளதே மன்னிப்புக் கேட்டதற்குக் காரணம் என்றும் அவர் சொன்னார்.
அதனை மாமன்னரும் ஒப்புக்கொண்டதாகக் கூறினார் திரு அன்வார்.
அநீதி நடந்ததால் மேல்முறையீடு செய்யப்பட்டது என்பதையும் சுட்டினார் திரு அன்வார்.
அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் தாம் விடுபட்டுவிட்டதாக அவர் தெரிவித்தார். அதனால் எந்தவோர் ஆவணத்திலும் தாம் கையெழுத்திடத் தேவையில்லை என்றும் திரு அன்வார் கூறினார்.
துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் திருமதி வான் அஸிஸா வான் இஸ்மாயிலும் தமது கணவர் திரு அன்வாருடன் செய்தியாளர்க் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
டாக்டர் மகாதீர் முகமதுவிடமிருந்து பிரதமர் பதவியை ஏற்பது குறித்தும் அவரிடம் வினவப்பட்டது.
முதலில் சீர்திருத்தங்கள் ஆக்ககரமாகச் செயல்படுத்தப்படுவதற்கு அவருக்கும் டாக்டர் வான் அஸிஸாவுக்கும் தேவையான அனைத்து ஆதரவையும் தாம் வழங்கப் போவதாகத் திரு அன்வார் கூறினார்.