ஆசிய பசிபிக்கின் முதல் COVID-19 சிறப்புப் பயண ஏற்பாட்டின் தொடக்கம்... எங்கு?
தைவானும் பாலாவ் (Palau) எனும் சிறிய பசிபிக் தீவும் ஆசிய பசிபிக்கின் முதல் கோவிட்-19 இருதரப்புத் தடையற்ற பயண ஏற்பாட்டைத் தொடங்கியுள்ளன.
தைவானும் பாலாவ் (Palau) எனும் சிறிய பசிபிக் தீவும் ஆசிய பசிபிக்கின் முதல் கோவிட்-19 இருதரப்புத் தடையற்ற பயண ஏற்பாட்டைத் தொடங்கியுள்ளன.
கிருமிப்பரவலை வெற்றிகரமாகக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ள தைவானும் பாலாவ் தீவும் தங்கள் பயணத்துறைக்குப் புத்துயிரூட்ட அந்த ஏற்பாட்டைச் செய்துகொண்டன.
தைவானுக்கு 4 நாள் அதிகாரத்துவப் பயணத்தை முடித்துக்கொண்டு பாலாவ் தீவின் அதிபர் இன்று நாடு திரும்புகிறார்.
இருதரப்புத் தடையற்ற பயண ஏற்பாட்டில் பங்கேற்கும் முதல் அணித் தைவானியச் சுற்றுப்பயணிகள் அவருடன் செல்கின்றனர்.
விமானத்தில் ஏறுவதற்கு முன் பயணிகள் அனைவரும் PCR பரிசோதனை செய்துகொள்வது கட்டாயம்.
சோதனையின் மூலம் ஒருவருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதியானால் பாதிக்கப்பட்டவரும் அவருடன் இருப்பவரும் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்ட மாட்டார்கள்.
மேலும் அவர்கள் உடனடியாகத் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
கிருமித்தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டோர் பயணத்தைத் தொடரலாம்.
பாலாவ் தீவைச் சென்றடைந்தவுடன் பயணம் முடியும்வரை அவர்கள் எந்தக் குழுவுடன் வந்தனரோ அதே குழுவினருடன் இருக்கவேண்டும்.
அவர்கள் தனியாக எங்கும் செல்ல அனுமதி இல்லை.
கூட்டமான இடங்களுக்கும் அவர்கள் செல்லக்கூடாது.
பாலாவ் உடனான இருதரப்புத் தடையற்ற பயண ஏற்பாடு வெற்றியடைந்தால் இதர நாடுகளுடனும் அத்தகைய பயணமுறையை அறிமுகம் செய்ய தைவான் திட்டமிட்டுள்ளது.