பிரேசில்: கறுப்பினச் சிறுவன் மரணம் - இனவாதத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
பிரேசிலில் 5 வயதுக் கறுப்பினச் சிறுவன் உயர்மாடிக் கட்டடத்திலிருந்து விழுந்து மாண்ட சம்பவத்தைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாடத்தில் இறங்கியுள்ளனர்.
பிரேசிலில் 5 வயதுக் கறுப்பினச் சிறுவன் உயர்மாடிக் கட்டடத்திலிருந்து விழுந்து மாண்ட சம்பவத்தைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாடத்தில் இறங்கியுள்ளனர்.
Miguel da Silva என்னும் சிறுவன், 9ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து மாண்டான். சிறுவனின் தாயார் இல்லப் பணிப்பெண்ணாகப் பணிபுரிகிறார்.
வெள்ளையினக் குடும்பம் ஒன்றில் அவர் பணிபுரிந்தார். அவர்களது செல்ல நாயை வெளியே நடைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்ததால் தமது பிள்ளையை முதலாளியின் பராமரிப்பில் அவர் விட்டுச் சென்றார்.
அப்போது அந்தச் சிறுவன் மின்தூக்கி உள்ளே சென்றான். கட்டடத்தின் ஆக உயர்ந்த மாடிக்குச் செல்வதற்கான பொத்தனை முதலாளி அழுத்தியுள்ளார்.
மின்தூக்கியில் தனியாக அந்தச் சிறுவன், ஆக உயர்ந்த மாடிக்குச் சென்றான். மின்தூக்கியிலிருந்து வெளியேறியதும் அவன் தடுப்புக் கம்பிகள் மீது ஏறிப் பின்னர் கீழே விழுந்தான். அந்தச் சம்பவம், கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.
முதலாளியின் அலட்சியப் போக்கு காரணமாகவே சிறுவன் மாண்டதாகக் குறைகூறல் எழுந்துள்ளது.
இல்லப் பணிப்பெண்களாகப் பணியாற்றும் கறுப்பினத்தவரின் பிள்ளைகளது ஆதரவற்ற நிலையை Miguel-இன் மரணம் பிரதிபலிப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
அந்தச் சம்பவம் வழக்கம்போல் இயல்பானதாக எடுத்துகொள்ளப்படும் என்றும் சம்பவத்திற்குக் காரணமானவர்கள், இப்போதும் தண்டிக்கப்படமாட்டார்கள் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சிலர் விரக்தியோடு கவலை தெரிவித்தனர்.
பிரேசிலின் மக்கள்தொகையில் 56 விழுக்காட்டினர் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள்.
ஆனால், அங்குள்ள வெள்ளை இனத்தவரைக் காட்டிலும் அவர்களது வருமானமும், ஆயுள்காலமும் கணிசமாகக் குறைவு.