கம்போடியாவில் கனத்த மழை, திடீர் வெள்ளம்; 24 பேர் மரணம்
கம்போடியாவில் தொடர்ந்து பெய்துவரும் கனத்த மழையாலும் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்தாலும் சுமார் 24 பேர் மாண்டனர்.
கம்போடியாவில் தொடர்ந்து பெய்துவரும் கனத்த மழையாலும் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்தாலும் சுமார் 24 பேர் மாண்டனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சுமார் 60,000 வீடுகளும் 240,000 ஹெக்டர் விவசாய நிலமும் நீரில் மூழ்கியுள்ளன.
தலைநகர் புனோம் பென் உள்ளிட்ட 19 மாநிலங்களிலும் நகரங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் சுமார் 245,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட 8,000 குடும்பங்கள் படகுகளில் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரத்துவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்காலிகத் தங்கும் இடங்களில் தஞ்சம் புகுந்துள்ள மக்களைப் பிரதமர் ஹுன் சென் சென்று சந்தித்தார்.
கனத்த மழையின் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலிருந்து திரண்ட, அளவுக்கு அதிகமான மழைநீர் வெள்ளத்தை ஏற்படுத்தியதாக அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்டவர்களுக்குப் போர்வைகளையும் அத்தியாவசியப் பொருள்களையும் அவர் விநியோகித்தார்.
கம்போடியாவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த வார இறுதியில் கனத்த மழை தொடரும் என்று வானிலை ஆய்வு நிலையம் முன்னுரைத்துள்ளது.