தப்பிக்க முயன்ற வடகொரியக் கைதியை வலைவீசிப் பிடித்த சீனக் காவல்துறையினர்
தப்பிக்க முயன்ற வடகொரியக் கைதியை வலைவீசிப் பிடித்த சீனக் காவல்துறையினர்
சிறையிலிருந்து தப்பியோடிய வடகொரியக் கைதியைச் சீனக் காவல் அதிகாரிகள் பிடித்துள்ளனர்.
அந்த 39 வயதுக் கைதி, சென்ற மாதம் 18ஆம் தேதியன்று ஜிலின் (Jilin) நகரிலிருக்கும் சிறைச்சாலையின் வெளிப்புறச் சுவரில் ஏறித் தப்பியதாக நம்பப்படுகிறது.
வடகிழக்குச் சீனாவில் உள்ள அதிகாரிகள் அந்தக் கைதியைப் பிடிப்பதற்கு 23,000 டாலர் வெகுமதி் வழங்கப்படும் என்று அறிவித்தவுடன் இணையவாசிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.
2013ஆம் ஆண்டில் அவர் வடகொரியாவிலிருந்து சட்டவிரோதமாகச் சீனாவுக்குள் நுழைந்து, அங்கிருந்த சில வீடுகளில் புகுந்து திருடியதாகக் கூறப்படுகிறது.
அவரைக் கண்டுபிடித்த மூதாட்டி ஒருவரைக் கத்தியால் குத்தியதாக நம்பப்படுகிறது. தப்பிக்க முயன்ற அவரைப் பின்னர் காவல்துறையினர் கைதுசெய்தனர்.
சட்டவிரோதமாகச் சீனாவில் நுழைந்தது, திருட்டு, கொள்ளை போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன. அவர் 2023ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வடகொரியாவுக்கு அனுப்பப்படவிருந்தார்.
மீண்டும் வடகொரியாவுக்கு அனுப்பப்படுவதைத் தவிர்க்கவே அவர் சிறையிலிருந்து தப்ப முயன்றார் எனச் சிலர் நம்புகின்றனர்.
வடகொரியாவிலிருந்து தப்பித்துள்ள சுமார் 1,100 பேர் சீனாவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக Human Rights Watch எனும் மனித உரிமைக் கண்காணிப்புக் குழு சுட்டியது.
அவர்களில் பலர் மீண்டும் வடகொரியாவுக்கு அனுப்பப்படுவர் - அங்கு அவர்கள் பல்வேறு மனித உரிமை மீறல்களை எதிர்நோக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.