ஒரு மில்லியன் டாலர் இழப்புக்கு காரணமான யானைக் கூட்டம் - சற்று ஓய்வெடுத்தது
ஒரு மில்லியன் டாலர் இழப்புக்கு காரணமான யானைக் கூட்டம் - சற்று ஓய்வெடுத்தது
சீனாவில், ஒரு மில்லியன் டாலர் இழப்புக்கு காரணமான யானைக் கூட்டம், சற்று ஓய்வெடுத்துள்ளது.
அந்நாட்டின் தென்மேற்குப் பகுதியிலுள்ள கிராமங்களைத் தாண்டி, சுமார் 500 கிலோமீட்டர் தொடர்ந்து நடந்துவந்த யானைகள், ஓய்வெடுப்பதைக் காட்டும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
காணொளியில், அவை குன்மிங் எனும் நகருக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் கூட்டமாகப் படுத்துக்கிடப்பது தெரிகிறது.
15 யானைகளைக் கொண்ட அந்தக் கூட்டம், கடந்த ஒரு வாரமாக விவசாய நிலங்களிலுள்ள சோளத்தைத் தின்ற வண்ணம் இருந்தன.
அந்த யானைகள் ஏன் தங்களுடைய வசிப்பிடத்திலிருந்து வெளியேறின என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அவை எங்கு செல்கின்றன என்பதும் தெரியவில்லை.
அவற்றின் பயணம் உலகின் கவனத்தையே ஈர்த்துள்ள நிலையில், அந்நாட்டு அதிகாரிகள் யானைகளின் நடமாட்டத்தை அணுக்கமாகக் கண்காணித்து வருகின்றனர்.
யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் செல்வதைத் தடுப்பதற்கு, சாலைகளில் கனரக வாகனங்கள் நின்ற வண்ணம் உள்ளன.
சுற்றுவட்டாரத்தில் உள்ள குடியிருப்பாளர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
யானைகளுக்கு 2 டன் தீனி விநியோகிக்கப்பட்டுள்ளது.
-AFP