சீனா: COVID-19 பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டால், அனைத்துலக விமானச் சேவைகள் அதிகரிக்கப்படும்
வெளிநாட்டிலிருந்து வருவோர் மூலம் COVID-19 கிருமி பரவும் சூழல் கட்டுக்குள் இருந்தால், சீனா அதன் அனைத்துலக விமானச் சேவைகளை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து வருவோர் மூலம் COVID-19 கிருமி பரவும் சூழல் கட்டுக்குள் இருந்தால், சீனா அதன் அனைத்துலக விமானச் சேவைகளை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலைச் சீன அரசாங்க ஊடகம் வெளியிட்டது.
தற்போது வெளிநாடுகளிலிருந்து சீனா செல்லும் நபர்கள் மூலம் கிருமி பரவுவதைக் குறைக்க, அனைத்துலக விமானச் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன.
ஒரு வாரத்திற்கு, அதிகபட்சமாக 134 விமானச் சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து, அந்த எண்ணிக்கை 407-க்கு அதிகரிக்கப்படும் என்று சீனாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
எந்தெந்த விமானச் சேவைகள் மீண்டும் செயல்படும் என்பது குறித்துத் தெளிவான தகவல் இல்லை.
மார்ச் மாதத்தில், அனைத்துலக விமானச் சேவைகளை ஆணையம் கணிசமாகக் குறைத்தது.
வெளிநாடுகளில் சிக்கியுள்ள சீனக் குடிமக்கள் பலர் தாயகம் திரும்ப முடியாததால், விமானச் சேவைகள் குறைக்கப்பட்டது குறித்து ஆணையத்தைக் குறைகூறுகின்றனர்.
வெளிநாட்டு விமான நிறுவனங்கள், வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே சீனாவிற்குச் சேவை வழங்க முடியும். சீன விமான நிறுவனங்களும் வெளிநாடுகளுக்கு வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே சேவை வழங்க ஆணையம் அனுமதித்துள்ளது.
இருப்பினும், அதற்கு முன்னரே, பல வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவுக்குச் செல்லும் பயணங்களை நிறுத்திவிட்டன.