ஆஃப்கானிஸ்தானில் நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்பவரின் மகள், பல்கலை நுழைவுத் தேர்வில் முதலிடம்
ஆஃப்கானிஸ்தானில் 18 வயதுப் பெண் ஒருவர் பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வில் முதல் இடம் பெற்றுள்ளார்.
ஆஃப்கானிஸ்தானில் 18 வயதுப் பெண் ஒருவர் பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வில் முதல் இடம் பெற்றுள்ளார்.
தற்போது, ஆஃகானிய அரசாங்கமும் தலிபானும் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தி வரும் வேளையில் அது நடந்துள்ளது.
1997ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை தலிபான் ஆட்சியில் இருந்தபோது, பெண்கள் பள்ளிக்கூடம் செல்வதற்கு ஆஃப்கானிஸ்தானில் தடை விதிக்கப்பட்டிருந்தது.
அதனால், நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்பவரின் மகளான ஷம்ஸியா அலிஸாடாவின் (Shamsia Alizada) சாதனை ஒரு முக்கியமான நேரத்தில் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்தத் தேர்வை எழுதிய சுமார் 170,000 மாணவர்களில் அவர் முதல் இடத்தைப் பிடித்ததை அடுத்து, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் உட்படப் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
மருத்துவராக விரும்பும் அவர், தமது படிப்புக்காகக் குடும்பத்தையே தலைநகர் காபூலுக்குத் தமது தந்தை மாற்றியதாக Reuters செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
மீண்டும் தலிபான் ஆட்சிக்கு வந்தால், ஆஃப்கானியப் பெண்களின் உரிமைகள் பாதிக்கப்படும் என்ற அச்சம் பலரிடம் நிலவி வருகிறது.
ஆஃப்கானிஸ்தானில் சுமார் 2.2 மில்லியன் பெண்கள் பள்ளிக்குச் செல்லவில்லை என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் குறிப்பிடுகிறது.