COVID-19: திணறும் இந்தோனேசியா, கட்டுப்பாடுகளைத் தொடரும் மியன்மார்
COVID-19: திணறும் இந்தோனேசியா, கட்டுப்பாடுகளைத் தொடரும் மியன்மார்
இந்தோனேசியாவில் கிருமிப்பரவல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
தலைநகர் ஜக்கர்த்தா கிருமி பரவும் அபாயம் அதிகமுள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற வாரம் அங்கு புதிதாகக் கிருமித்தொற்று உறுதியானோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது.
இந்தோனேசியாவில் நோய்த்தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 102,000-ஐக் கடந்துவிட்டது.
4,900-க்கும் அதிகமானோர் மாண்டனர்.
இதற்கிடையே, மியன்மார், அனைத்துலக விமானங்களுக்கு விதித்த தடையை அடுத்த மாத இறுதி வரை நீட்டித்திருக்கிறது.
யாங்கோனுக்கும் (Yangon), வெளிநாட்டு நகரங்களுக்கும் இடையிலான விமானச் சேவைகள் நாளை மறுநாள் தொடங்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், வெளிநாடுகளிலிருந்து செல்வோர் மூலம் COVID-19 நோய்ப் பரவல் அதிகரிக்கலாம் என்ற அச்சத்தால் அவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
வட்டார நாடுகளில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வருவது அத்தகைய அச்சத்துக்குக் காரணம்.
மியன்மாரில் 351 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 6 பேர் மாண்டனர்.