மலேசியத் தூதருக்கும், இந்தோனேசிய அமைச்சருக்கும் இடையில் இல்லப் பணிப்பெண்கள் விவகாரத்தின் தொடர்பில் சந்திப்பு
இறுதியாக மனந்திறந்த முறையில் தொடர்ந்து உறவை நிலைநாட்டுவதற்கான மலேசியாவின் கடப்பாட்டை இந்தோனேசியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார் திரு சஹிட்.
மலேசியத் தூதர், ஜக்கர்த்தாவில் இந்தோனேசியாவின் மனிதவள அமைச்சரைச் சந்திக்கவுள்ளார்.
மலேசியாவுக்கு இந்தோனேசியா இல்லப் பணிப்பெண்களை வேலைக்கு அனுப்புவதற்கான தடை குறித்து பரிசீலனை செய்யவிருப்பதாக அறிக்கைகள் வெளியாயின.
கடந்த ஆண்டு நடந்த இருதரப்புச் சந்திப்பின்போது தடை செயல்படுத்தப்படுவது குறித்த சாத்தியம் குறித்து இந்தோனேசியா பேசியிருந்தது.
பினாங்கில் பணிப்பெண் அவரின் முதலாளிகளின் துன்புறுத்தலால் மாண்டதாகச் சந்தேகிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் தடை குறித்த பேச்சு எழுந்துள்ளது.
21 வயது அட்லீனா லிசோய் தலையிலும் கை, கால்களிலும் காயங்களுடன் மீட்கப்பட்டார். எனினும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் மாண்டார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய மலேசியத் துணைப் பிரதமர் அஹ்மட் சஹிட் ஹமீடி, இந்தோனேசிய அரசாங்கத்திடம் தூதர் நான்கு விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டிருப்பதாகச் சொன்னார்.
இத்தகைய துன்புறுத்தல் சம்பவங்கள் பரவலாக நடக்கும் ஒன்றல்ல.
மலேசியாவில் பணிபுரியும் வெளிநாட்டு, உள்ளூர் ஊழியர்கள் என யார் துன்புறுத்தப்பட்டாலும் அந்தச் சம்பவத்தை அரசாங்கம் மூடிமறைத்ததில்லை.
அடுத்து, 2016ஆம் ஆண்டு காலாவதியான புரிந்துணர்வுக் குறிப்பு ஒன்றை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.
இந்தோனேசிய மனிதவள அமைச்சுக்கும் மலேசிய மனிதவள அமைச்சுக்கும் இடையில் மேலும் கலந்துரையாடல்கள் நடைபெற வேண்டும்.
இறுதியாக மனந்திறந்த முறையில் தொடர்ந்து உறவை நிலைநாட்டுவதற்கான மலேசியாவின் கடப்பாட்டை இந்தோனேசியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார் திரு சஹிட்.
இதற்கு முன்னர் 2009இல் மலேசியாவுக்கு இல்லப் பணிப்பெண்களை அனுப்பவதற்கு இந்தோனேசியா தடை விதித்தது. அது 2011ஆம் ஆண்டு அகற்றப்பட்டது.