மும்பை நகரின் வடகிழக்குப் பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் தெரு நாய்கள் சுற்றித் திரிவது வழக்கம். ஆனால் அண்மையில் அவை நிறம் மாறியிருப்பது வழக்கம் அல்லவே என்று புருவம் உயர்த்தியுள்ளனர் பலர்.
அவை நீல நிறமாக மாறியிருப்பதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தனர் சுற்றுப்புற ஆர்வலர்கள். அங்குள்ள தொழிற்சாலைகளும் உற்பத்தி நிறுவனங்களும் மாசுக் கட்டுப்பாட்டுத் தரநிலைகளைச் சரிவர பின்பற்றவில்லை என்பது தெரியவந்துள்ளது.
நாய்களின் படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. இந்தியாவின் மோசமான தூய்மைக் கேட்டைப் பிரதிபலிக்கும் சின்னங்கள் அவை என்று குமுறுகின்றனர், சுற்றுப்புற ஆர்வலர்கள்.
நாய்கள் வண்ணப்பூச்சு தொழிற்சாலை ஒன்றில் சுற்றித் திரிந்திருக்கின்றன என்று காரணம் சொன்னது மும்பை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். சப்பைக்கட்டுக் கட்டித் தப்பிக்க முடியாது என்று மக்கள் கொதித்தனர்.
அதனைத் தொடர்ந்து அது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
நிறம் மாறியிருக்கும் அந்த வாயில்லா பிராணிகள், மனிதர்களுக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளன.