மலேசியத் தீயணைப்பாளரின் மரணம் கொலையாக வகைப்படுத்தப்படும்
மலேசியாவில், ஸ்ரீ மஹா மாரியம்மன் கோயில் அருகே நடந்த கலவரத்தில் காயமுற்று மாண்ட தீயணைப்பாளர் முகமது அதிப் முகமது காசிமின் மரணம் கொலை என்று வகைப்படுத்தப்படும்.
மலேசியாவில், ஸ்ரீ மஹா மாரியம்மன் கோயில் அருகே நடந்த கலவரத்தில் காயமுற்று மாண்ட தீயணைப்பாளர் முகமது அதிப் முகமது காசிமின் மரணம் கொலை என்று வகைப்படுத்தப்படும்.
சிலாங்கூர் மாநிலக் காவல்துறைத் துணைத் தலைவர் அப்துல் ரஸிட் அப்துல் வஹாப் அதனைத் தெரிவித்தார்.
தீயணைப்பாளரின் மரணம், கொலை வழக்காக விசாரிக்கப்படும் என்றார் அவர்.
இதற்குமுன் அது கொலை முயற்சி என்னும் பிரிவின்கீழ் விசாரிக்கப்பட்டு வந்தது.
சிலாங்கூர் மாநிலத்தில் சென்ற மாதம் 27 ஆம் தேதி, சீஃபீல்ட் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் அருகே மூண்ட கலவரத்தில், சிலரால் அவர் தாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
சுபாங் ஜெயாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் முதலில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் தேசிய இதய நிலையத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மாண்டார்.
கெடா மாநிலத்தில் உள்ள அவரின் சொந்த ஊரில் அவரது நல்லுடல் அடக்கம் செய்யப்படும்.
சிலாங்கூர் மாநில தலைமை அமைச்சர் அமிருடின் ஷாரி மறைந்த தீயணைப்பாளரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.