இந்தியா: பயனீட்டாளர்களைக் காக்கும் நோக்கில், சட்டவிரோதக் கடன் வழங்கும் செயலிகளை நீக்கிய கூகள்
இந்தியா: பயனீட்டாளர்களைக் காக்கும் நோக்கில், சட்டவிரோதக் கடன் வழங்கும் செயலிகளை நீக்கிய கூகள்
இந்தியாவில் உள்ள தனது பயனீட்டாளர்களைக் காக்கும் விதமாக, சட்டவிரோதமாகக் கடன் வழங்கும் பிரபல செயலிகள் நீக்கப்பட்டுள்ளதாக கூகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூகளின் Play Store வாயிலாக மில்லியன் கணக்கான இந்தியக் குடிமக்கள், தனிநபர் கடன் வழங்கும் செயலிகளைப் பதிவிறக்கம் செய்கிறார்கள்.
அதில், தங்களது பெயர், வயது, முகவரி, வங்கிக் கணக்கு விவரம், ஆதார் அட்டை எண் உள்ளிட்ட பல்வேறு அந்தரங்கத் தகவல்களைப் பதிவு செய்கின்றனர்.
அவசரத்துக்கு அதன் வழியாகக் கடன் வாங்கும் பலர், பின்னர் அந்தச் செயலிகள் வசூலிக்கும் வட்டி விகிதத்தைப் பார்த்து மலைத்துப் போகின்றனர்.
சில செயலிகள், கொடுத்த கடனை வசூலிக்க, பயனீட்டாளர்களை மிரட்டுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில செயலிகள், வாடிக்கையாளர்களின் நிழற்படத் தொகுப்பை அணுகி, அனுமதியின்றி அவற்றிலுள்ள படத்தை எடுப்பதாகவும் குறைகூறப்படுகிறது.
எனவே, அரசாங்கமும், பொதுமக்களும் கொடுத்த தகவலின் அடிப்படையில் கடன் வழங்கும் நூற்றுக்கணக்கான செயலிகளைப் பரிசீலனைக்கு உட்படுத்தியதாக கூகள் தெரிவித்தது.
உள்நாட்டுச் சட்ட, திட்டங்களுக்கு ஏற்ற வகையில் செயலிகள் இல்லை என்றால், அவை Play Store-இல் இருந்து நீக்கப்படும் என்று கூகள் தெரிவித்தது.
குறிப்பாக, எத்தனை செயலிகள் நீக்கப்பட்டன என்ற தகவலை, கூகள் வெளியிடவில்லை.