மலேசியா: ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் காவல்துறையினர் குவிப்பு
சிலாங்கூர் மாநிலத்தில் அமைந்துள்ள சீஃபீல்ட் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் இன்று (டிசம்பர் 18) காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூர்: சிலாங்கூர் மாநிலத்தில் அமைந்துள்ள சீஃபீல்ட் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் இன்று (டிசம்பர் 18) காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் அங்கு நடந்த கலவரத்தில் காயமுற்ற தீயணைப்பாளர் சிகிச்சை பலனின்றி மாண்டார்.
அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் மீண்டும் பதற்றம் உருவாகக்கூடும் என்ற அச்சத்தில் காவல் அதிகாரிகள் சுமார் 400 பேர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நிலைமையைக் கண்காணித்து, கோவிலையும் அந்தப் பகுதியையும் பாதுகாப்பது தங்களின் தலையாய பணி என்று சிலாங்கூர் மாநிலக் காவல்துறைத் துணைத் தலைவர் அப்துல் ரஷித் அப்துல் வஹாப் The Malaysian Insight செய்தித் தளத்திடம் தெரிவித்தார்.
பொது ஒழுங்கையும் அமைதியையும் நிலைநாட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகச் சொன்னார் அவர்.
மறைந்த தீயணைப்பாளர் முகமது அதிப் முகமது காசிமின் நல்லுடல் கெடா மாநிலத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள சுமார் 1,000 பேர் திரண்டனர்.