இந்தியாவிற்கு அடுத்த 4 வாரங்கள் மிக முக்கியமானது: சுகாதார உயர் அதிகாரி எச்சரிக்கை
இந்தியாவில் இரண்டாம் கட்டக் கிருமிப்பரவல் எதிர்பார்க்கப்பட்டதைவிட வேகமாய் இருப்பதாக சுகாதார உயர் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் இரண்டாம் கட்டக் கிருமிப்பரவல் எதிர்பார்க்கப்பட்டதைவிட வேகமாய் இருப்பதாக சுகாதார உயர் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
அதனைக் கட்டுப்படுத்துவதில் அடுத்த நான்கு வாரங்கள் மிக முக்கியமானவை என்றும் அவர் கூறினார்.
ஆசியாவில் மிக மோசமாய் பாதிக்கப்பட்டுள்ள நாடு இந்தியா.
தொடர்ந்து இரண்டாவது நாளாக அங்கு ஒரே நாளில் 100,000-க்கும் மேற்பட்டோருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கிருமிப்பரவலால் அங்கு 630 பேர் மாண்டனர். ஐந்து மாதங்களில் ஒரே நாளில் பதிவான ஆக அதிகமான மரண எண்ணிக்கை அது.
இந்தியாவின் ஆக வசதி படைத்த மாநிலமான மகாராஷ்டிராவில் நேற்று மட்டும் 55,000-க்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
தினசரி இந்தியாவில் பதிவாகும் கிருமித்தொற்றுச் சம்பவங்களில் பாதிக்கும் மேல் அந்த மாநிலத்தில் பதிவாகின்றன.
தலைநகர் புதுடில்லி, உடனடி இரவு நேர ஊரடங்கைப் பிறப்பித்துள்ளது.
இரவு 10 மணிக்குத் தொடங்கும் ஊரடங்கு காலை ஐந்து மணி வரை நீடிக்கும். இந்த மாத இறுதிவரை அந்தக் கட்டுப்பாடு நடப்பில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.