இந்தியா: முன்னாள் அதிபர் பிரணாப் முக்கர்ஜிக்குக் கிருமித்தொற்று - இன்று மேலும் 50,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
இந்தியா: முன்னாள் அதிபர் பிரணாப் முக்கர்ஜிக்குக் கிருமித்தொற்று - இன்று மேலும் 50,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
இந்தியாவில் COVID-19 நோய், கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.
முன்னாள் அதிபர் பிரணாப் முக்கர்ஜியையும் சேர்த்து, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 50,000-க்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
84 வயதான திரு. பிரணாப் புதுடில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
அவருக்குத் தற்போது செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாக The Hindu நாளேடு தெரிவித்தது.
இந்தியாவின் அதிபராக திரு. பிரணாப் 2012-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை பொறுப்பில் இருந்தார்.
ஜூலை 30ஆம் தேதி முதல் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 50,000 பேர் கிருமித்தொற்றால் புதிதாக பாதிக்கப்படுகின்றனர்.
தற்போது அங்கு பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 2.2 மில்லியனைக் கடந்துவிட்டது.
இருப்பினும், இந்தியாவில் மாண்டோர் விகிதம், மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது.
அங்கு குணமடைவோர் எண்ணிக்கையும் அதிக அளவில் உள்ளது.
கொரோனா கிருமியால் மாண்டுபோவோரின் சராசரி எண்ணிக்கை குறைந்து, பூரண குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை தினமும் கூடி வருவதாக, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
அது, இந்தியா சரியான திசையில் சென்று கொண்டிருப்பதைப் புலப்படுத்துவதாக அவர் சொன்னார்.
COVID-19 நோய்ப்பரவலால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகியவை, முதல் மூன்று இடங்களில் உள்ளன.