புதுடில்லியின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு
இந்தியத் தலைநகர் புதுடில்லியின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியத் தலைநகர் புதுடில்லியின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பில் ஏற்பட்ட வன்முறையில் மாண்டோர் எண்ணிக்கை 13-க்கு உயர்ந்துள்ளது.
150 பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்களில் சுமார் 20 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
அவர்களில் பெரும்பாலோர் உடல்களில் குண்டுக்காயம் இருந்ததாக மாண்டோரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
புதுடில்லியின் வடகிழக்குப் பகுதியில் கலவரக்காரர்களைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நேற்றுமுன்தினம் இரவு மோதல் மூண்டது.
அது ஒரு கட்டத்தில் சமய மோதலாக உருவெடுத்தது.
இத்தகைய பைத்தியக்காரத்தனம் உடனே முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும் என்று புதுடில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறினார்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரை அவர் சந்தித்து ஆறுதல் கூறினார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா-வைச் சந்தித்து, புதுடில்லியில் அமைதியை நிலைநிறுத்துவது குறித்து திரு. கேஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார்.
அமைதியைக் கொண்டுவரும் முயற்சியில் அரசியலுக்கு அப்பாற்பட்டு எல்லாத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர்
கேட்டுக்கொண்டார்.