அழிந்ததாகக் கருதப்பட்ட ஆமைகளுக்கு மறுவாழ்வு தந்த இந்தியக் கோவில்
Black softshell turtle எனப்படும் அருகிவரும் இனத்தைச் சேர்ந்த ஆமைகள் உலகில் அழிந்துவிட்டதாக 2002இல் அறிவிக்கப்பட்டது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)
Black softshell turtle எனப்படும் அருகிவரும் இனத்தைச் சேர்ந்த ஆமைகள் உலகில் அழிந்துவிட்டதாக 2002இல் அறிவிக்கப்பட்டது.
இயற்கைப் பாதுகாப்பு அனைத்துலக ஒன்றியம் அவ்வாறு அறிவித்தது.
ஆனால் அந்த ஆமைகளை அழிவிலிருந்து காப்பாற்றக்கூடும் என்ற நம்பிக்கையைக் கொடுத்துள்ளது இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள ஓர் இந்துக் கோவில்.
ஹஜோ புனிதப் பயண நிலையத்திலிருக்கும் ஹயகிரிவ மாதவ் கோவிலின் குளத்தில் அந்த ஆமைகளை இனப்பெருக்கம் செய்துவருகிறார்கள் கோவில் அதிகாரிகள்.
அதன் தொடர்பில் தனிப்பட்ட முறையில் முயற்சி மேற்கொள்கிறார் அவ்விடத்தை மேற்பார்வையிடும் பிரணாப் மலகார்.
ஆமைகளை விஷ்ணுவின் ஓர் அவதாரமாக வழிபடும் பக்தர்களால் அவற்றுக்குக் கோவிலில் எந்த ஆபத்தும் நேராது என்று அவர் கூறினார்.
ஆமைகள் கரையில் இடும் முட்டைகளைப் பாதுகாக்கிறார் மலகார்.
ஜனவரியில் கோவில் பாதுகாப்பிலிருந்த முதல் 16 black softshell ஆமை முட்டைகள் குஞ்சு பொரிந்துள்ளன.
அதனைத் தொடர்ந்து அதே வெற்றியை எதிர்பார்த்து மேலும் 18 கோவில் குளங்களில் இதேபோன்ற முயற்சியை மேற்கொள்ளத் திட்டமுள்ளது.