திருமண ஒன்றுகூடல் காரணமாக ஈரானில் மீண்டும் அதிகரித்துள்ள COVID-19 கிருமிப் பரவல்
திருமண ஒன்றுகூடல் காரணமாக ஈரானில் மீண்டும் அதிகரித்துள்ள COVID-19 கிருமிப் பரவல்
ஈரானில் ஒரு திருமண ஒன்றுகூடல் காரணமாக, அங்கு மீண்டும் அதிக அளவில் COVID-19 கிருமித்தொற்று அதிகரித்துள்ளதாக அதிபர் ஹசன் ரூஹானி (Hassan Rouhani) தெரிவித்துள்ளார்.
ஈரானில், கடந்த சில நாள்களாக கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இரண்டு நாள்களுக்கு முன்னர் ஒரே நாளில் 3,574 பேருக்கு கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
மீண்டும் இவ்வளவு அதிகமானோர் கிருமித்தொற்றுக்கு ஆளாகக் காரணம் ஒரே ஒரு திருமண நிகழ்ச்சி. அதனால் மீண்டும் ஈரான் பல வகைகளில் பாதிக்கப்படும் என்று அதிபர் ஹசன் ரூஹானி கூறினார்.
பொருளியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதால், COVID-19 கிருமித்தொற்றின் இரண்டாம் அலை தாக்கக்கூடும் என்பது நன்றாகத் தெரியும் ஆனால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பொருளியலை மீட்க வேறு வழியில்லை என்றார் அவர்.
கிருமித்தொற்று காரணமாக ஈரானில் பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஏப்ரல் மாத பிற்பாதியிலிருந்து தளர்த்தப்பட்டு வருகின்றன.
ஈரானில் 167,000க்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,000க்கும் அதிகமானோர் மாண்டனர்.