ஜொகூரில் உள்ள செமங்கர் நீர்ச் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ - 100க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் விநியோகம் பாதிப்பு
ஜொகூரில் உள்ள செமங்கர் நீர்ச் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ - 100க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் விநியோகம் பாதிப்பு
ஜொகூரில் உள்ள செமங்கர் (Semangar) நீர்ச் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று தீச்சம்பவம் ஏற்பட்டது.
அதனால் ஜொகூர் பாரு, கூலாய் வட்டாரங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.
செமங்கர் நீர்ச் சுத்திகரிப்பு நிலையம் கோத்தா திங்கியில் உள்ளது.
தீச்சம்பவம் நேற்றுப் பிற்பகல் 2 மணிவாக்கில் நேர்ந்ததாகவும் அதனால் சுத்திகரிப்பு நிலையத்தின் சில முக்கிய இயந்திரங்கள் சேதமடைந்தாகவும் நிலையத்தை நடத்தும் Ranhill SAJ நிறுவனம் Facebook பதிவுமூலம் தெரிவித்தது.
தற்போது சேதங்களைச் சரிசெய்வதாகவும் அது கூறியது.
நிலையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க 12 தீயணைப்பு வீரர்கள் அரும்பாடுபட்டனர். சுமார் 2 மணிநேரப் போராட்டத்திற்குப்பின் தீ அணைக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட இடங்களில் இப்போது தண்ணீர் விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்புவதாகவும் விரைவில் அனைத்து இடங்களிலும் சீரான தண்ணீர் விநியோகம் இருக்கும் என்றும் Ranhill SAJ நிறுவனம் கூறியது.
- CNA/am