இந்தியா: சிறுவனின் சைக்கிள் சிக்கலைத் தீர்த்ததற்காக காவல்துறைக்குப் பாராட்டு
இந்தியா: கேரள மாநிலத்தில், தனது சைக்கிள் 2 மாதம் ஆகியும் பழுதுபார்க்கப்படவில்லை என்று புகார்செய்த 10 வயதுச் சிறுவனுக்கு உதவிய காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளனர்.
இந்தியா: கேரள மாநிலத்தில், தனது சைக்கிள் 2 மாதம் ஆகியும் பழுதுபார்க்கப்படவில்லை என்று புகார்செய்த 10 வயதுச் சிறுவனுக்கு உதவிய காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளனர்.
நவம்பர் 25 அன்று கைப்பட எழுதிய கடிதத்தைக் காவல்துறையிடம் சமர்ப்பித்திருக்கிறார் 10 வயது அபின்.
தன்னுடைய சைக்கிளையும் சகோதரனுடைய சைக்கிளையும் செப்டம்பர் 5 அன்று பழுதுபார்க்கும் கடையில் கொடுத்ததாக எழுதியிருந்தார் அவர்.
ஆனால் இன்னும் அது குறித்துத் தகவல் இல்லை என்று அவர் வருத்தப்பட்டதாக NDTV குறிப்பிட்டுள்ளது.
பலமுறை தொலைபேசியில் அழைத்தும் பதில் இல்லை என்றும் அபின் கூறினார்.
கடை மூடப்பட்டிருந்தாகவும் சைக்கிளை மீட்டுத் தர வீட்டில் யாரும் இல்லை என்றும் அவர் எழுதியிருந்தார்.
புகாரைப் பெற்ற காவல்துறையினர் சைக்கிள் கடையில் விசாரித்திருக்கின்றனர்.
உடல்நலமில்லாதது, மகனின் திருமண ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தது ஆகியவற்றின் காரணமாக சைக்கிளைப் பழுதுபார்க்க நேரமில்லாமல்போனதாகக் கடைக்காரர் காவல்துறை அதிகாரியிடம் கூறியிருக்கிறார்.
சைக்கிளை விரைவில் ஒப்படைக்கவும் உறுதியளித்தார் அவர்.
சிறுவர்கள் தங்கள் சைக்கிளைத் திரும்பப் பெற்றதாகக் கேரளக் காவல்துறை அதன் Facebook பக்கத்தில் பகிர்ந்தது.
அதற்குப் பொதுமக்களிடமிருந்து பாராட்டுக் குவிந்தது.
4,000க்கும் மேலானோர் அச்செய்தியைப் பகிர்ந்தனர்.