'ஆசியான் வட்டாரத்திற்குள் பாதுகாப்பான பயணத்திற்கு உரிய நெறிமுறைகள் தேவை': பிரதமர் லீ
ஆசியான் வட்டாரத்திற்குள், மக்கள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்வதற்கு உரிய நெறிமுறைகள் அமைக்கப்படவேண்டும் என்று பிரதமர் லீ சியென் லூங் பரிந்துரைத்துள்ளார்.
ஆசியான் வட்டாரத்திற்குள், மக்கள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்வதற்கு உரிய நெறிமுறைகள் அமைக்கப்படவேண்டும் என்று பிரதமர் லீ சியென் லூங் பரிந்துரைத்துள்ளார்.
சிங்கப்பூர், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தொடங்கியுள்ளதாக அவர் சொன்னார்.
பொதுச் சுகாதார ஆபத்து குறையும்போது அவை மேலும் தளர்த்தப்படும் என்று திரு. லீ கூறினர்.
பாதுகாப்பான பயணத்துக்கான நெறிமுறைகள், வருங்காலத்தில் உருவாகக் கூடிய பொதுச் சுகாதார நெருக்கடிகளின்போதும் உதவியாக இருக்கும் என்றார் அவர்.
36ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில், காணொளி மூலம் கலந்துகொண்டபோது, திரு லீ அந்தப் பரிந்துரைகளை முன்வைத்தார்.
கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த உதவும் தொழில்நுட்பத்தை, ஆசியான் நாடுகள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
COVID-19 நோய்க்கான தடுப்பூசி தயாரானதும், அதன் உற்பத்தியிலும் விநியோகத்திலும் ஆசியான் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் பிரதமர் லீ வலியுறுத்தினார்.
தடுப்பூசிக்குப் பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்க அது உதவியாக இருக்கும்.
தரமான, கட்டுப்படியான விலையில் அமைந்த தடுப்பூசியின் விநியோகத்தை மேம்படுத்தவும் அது உதவியாக இருக்கும் என்றார் திரு. லீ.