டாக்டர் மகாதீரைச் சந்திக்க வேண்டும் : MH370வில் இருந்த சீனப் பயணிகளின் உறவினர்கள்
மலேசிய அரசாங்கத்துக்கான கடிதம் என்று தங்களின் கோரிக்கையை அவர்கள் அங்கு சமர்பித்தனர்.
மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது இந்த வாரம் சீனா செல்லும்போது அவரைச் சந்திக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் காணாமல்போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH370வில் இருந்த சீனப் பயணிகளின் உறவினர்கள் பெய்ஜிங்கில் உள்ள மலேசியத் தூதரகத்துக்கு வெளியே கூடினர்.
மலேசிய அரசாங்கத்துக்கான கடிதம் என்று தங்களின் கோரிக்கையை அவர்கள் அங்கு சமர்பித்தனர்.
239 பேருடன் காணாமல்போன விமானத்தில் பெரும்பாலும் சீனாவைச் சேர்ந்தோர் இருந்தனர்.
விமானம் கோலாலம்பூரிலிருந்து புறப்பட்ட பெய்ஜிங்கிற்குச் செல்லும் வழியில் காணாமற்போனது.
மலேசியப் பிரதமரோ அந்நாட்டு அரசாங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளோ காணாமல்போனோரின் உறவினர்களைச் சந்திக்கக் கோருவதாகக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது.
நாளை டாக்டர் மகாதீர் ஐந்து நாள் பயணம் மேற்கொண்டு சீனா செல்லவிருக்கிறார்.
அடுத்த திங்கட்கிழமை சீனப் பிரதமர் லீ கர் சியாங்கை டாக்டர் மகாதீர் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.
விமானத்துக்கான தேடலைத் தொடரவேண்டும்; விமானச் சேவை நிறுவனத்தையும் அதிகாரிகளையும் சந்திக்க வேண்டும்; அண்மையில் வெளியிடப்பட்ட புலனாய்வு அறிக்கை குறித்து தெளிவாகவும் விரிவாகவும் விளக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
சீனாவின் வெளியுறவு அமைச்சுக்கும் அதுபோன்ற கடிதம் முன்வைக்கப்பட்டது.
2014ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 8ஆம் தேதியோடு எங்களின் வாழ்க்கை நின்றதுபோன்ற உணர்வு...
என்று உறவினர் ஒருவர் கூறினார்.
விமானத்தின் மறைவுக்கான உண்மையான காரணத்தை உறுதிப்படுத்த இயலவில்லை என்று புலனாய்வுக் குழு கூறியது.
அண்மையில் வெளியான சுமார் 1,500 பக்க அதிகாரபூர்வ அறிக்கை சீன மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை என்றும் காணாமல்போன விமானம் குறித்த புதிய தகவல் அதில் இடம்பெறவில்லை என்றும் உறவினர்கள் குறைகூறினர்.