மலேசியா: பயங்கரவாதச் சந்தேக நபர்கள் 7 பேர் கைது
மலேசியக் காவல்துறையினர், பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புகளை வைத்துள்ளதாக நம்பப்படும் 7 சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளனர்.
கோலாலம்பூர்: மலேசியக் காவல்துறையினர், பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புகளை வைத்துள்ளதாக நம்பப்படும் 7 சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளனர். அவர்களில் ஒருவர் மலேசியத் தலைவர்களுக்கு எதிராகக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களில் மூவர் இந்தோனேசியர்கள். மற்றவர்கள் மலேசியர்கள். இம்மாதம் 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெற்ற சோதனை நடவடிக்கையில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர். திரெங்கானு, சிலாங்கூர், பேராக், ஜொகூர் ஆகிய மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டது.
ஜொகூரில் பிடிபட்ட 34 வயது வேலையில்லா ஆடவர், மலேசிய மாமன்னருக்கும் பிரதமர் டாக்டர் மகாதீருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்டது. பிரதமர் அலுவலக அமைச்சர் முஜாஹிட் யூசோப் ராவாவிற்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் மீது விசாரணை தொடர்கிறது.