மலேசியா: அனைத்துத் துறைகளின் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் தங்குமிடம் ஏற்பாடுசெய்யவேண்டும்
மலேசிய அரசாங்கம், அனைத்துத் துறைகளில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும், முதலாளிகள் முறையான தங்குமிட வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
மலேசிய அரசாங்கம், அனைத்துத் துறைகளில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும், முதலாளிகள் முறையான தங்குமிட வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களின் வசிப்பிடங்களில் உள்ள சுகாதாரமற்ற சூழல், மலேசியாவில் கிருமிப் பரவலுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
தோட்ட வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு மட்டும் தங்குமிட வசதி செய்து கொடுக்க வேண்டியது கட்டாயம் என்று முன்னர் கூறப்பட்டிருந்தது. உற்பத்தி, சேவை ஆகிய துறைகளில் வேலை செய்வோர் அதில் சேர்க்கப்படவில்லை.
எனவே, வெளிநாட்டு ஊழியர்கள் மலிவான கட்டணத்தில் நெருக்கிக்கொண்டு மோசமான இடங்களில் தங்கியிருந்தனர். கிருமிப் பரவலுக்கு எதிரான நடவடிக்கை காரணமாக அத்தகைய இடங்கள் முடக்கப்பட்டன.
இந்நிலையில், செப்டம்பர் முதல் தேதியிலிருந்து, எந்தத் துறையில் வேலை செய்தாலும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் முறையான தங்குமிட வசதி செய்து கொடுக்க வேண்டியது முதலாளிகளின் கடமை என்று கூறப்பட்டுள்ளது.
அனைத்துலகத் தொழிலாளர் அமைப்பின் விதிகளுக்கு ஏற்பத் தங்குமிட வசதிகளைச் செய்துகொடுக்க முதலாளிகளுக்கு மூன்று மாத அவகாசம் வழங்கப்படும் என்று மலேசிய மனிதவள அமைச்சர் சரவணன் கூறினார்.