மத்திய வங்கி, கஸானா நிதிகள் 1MDB கடனை அடைக்க பயன்படுத்தப்பட்டன - மலேசிய நிதி அமைச்சர்
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் அரசாங்கம், மத்திய வங்கி, அரசாங்க நிதி நிறுவனமான கஸானா ஆகியவற்றிடமிருந்து பெறப்பட்ட பணத்தைக் கொண்டு 1MDB கடன்களை அடைத்ததாக வெளியான தகவலை, மலேசிய நிதி அமைச்சர் லிம் குவான் எங் (Lim Guan Eng) உறுதிப்படுத்தியுள்ளார்.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் அரசாங்கம், மத்திய வங்கி, அரசாங்க நிதி நிறுவனமான கஸானா ஆகியவற்றிடமிருந்து பெறப்பட்ட பணத்தைக் கொண்டு 1MDB கடன்களை அடைத்ததாக வெளியான தகவலை, மலேசிய நிதி அமைச்சர் லிம் குவான் எங் (Lim Guan Eng) உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன் தொடர்பில், நிதியமைச்சு சுமார் 7 பில்லியன் ரிங்கிட்டை இதுவரை செலுத்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சென்ற ஆண்டின் மத்தியில், கஸானா ஒரு பில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான தொகையை, நிதியமைச்சின் பங்குகளுக்கு ஈடாக, மலேசிய அரசாங்கத்திடம் வழங்கியது. அதைக் கொண்டு, அபுதாபியின் IPIC நிறுவனத்துக்குச் செலுத்தவேண்டிய கடன் அடைக்கப்பட்டது.
மலேசியாவின் மத்திய வங்கி, அரசாங்க நிலத்தைச் சுமார் 2 பில்லியன் ரிங்கிட்டிற்கு வாங்கியது. அந்தப் பணமும் 1MDB கடன்களைச் செலுத்தப் பயன்பட்டதாகக் கூறப்பட்டது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அந்தத் தகவல்களை வெளியிட்டது.
முன்னதாக, அரசாங்க நிலத்தை வாங்கியது தொடர்பான விவரங்களை ஊழல் எதிர்ப்பு ஆணையத்திடம் ஒப்படைத்திருப்பதாக மத்திய வங்கி கூறியிருந்தது.
இருப்பினும், அந்தப் பரிவர்த்தனை விதிகளுக்கு உட்பட்டது என்றும், வங்கியின் நடைமுறைச் சட்டங்களுக்குப் பொருத்தமாக இருந்தது என்றும் அது தெரிவித்தது.
அந்த விவகாரத்தின் தொடர்பில், வெளிப்படையாக நடந்துகொள்ளவிருப்பதாக வங்கி அதன் இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.