MH17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட 5 ஆண்டுக்குப் பிறகும் கேள்விகள் நீடிக்கின்றன
மலேசிய ஏர்லைன்ஸ் MH17 விமானம் கிழக்கு உக்ரேனுக்கு உயரே சுட்டு வீழ்த்தப்பட்டு (ஜூலை 17) வரும் புதன்கிழமையோடு 5 ஆண்டுகள் நிறைவடையும்.
மலேசிய ஏர்லைன்ஸ் MH17 விமானம் கிழக்கு உக்ரேனுக்கு உயரே சுட்டு வீழ்த்தப்பட்டு (ஜூலை 17) வரும் புதன்கிழமையோடு 5 ஆண்டுகள் நிறைவடையும்.
அந்தச் சம்பவத்தில் விமானத்தில் இருந்த 298 பேரும் மடிந்தனர்.
ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து கோலாலம்பூருக்குச் சென்று கொண்டிருந்த அந்த போயிங் 777 ரக விமானம் உள்நாட்டுப் போர் நிலவிய பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்பட்டன; பல்வேறு அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட்டன; சிலர் மீது குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.
எனினும் 2014 ஜூலை 17 அன்று நிகழ்ந்த அந்தப் பேரிடர் குறித்துப் பல கேள்விகள் நீடிக்கின்றன.
5 கேள்விகள் இதோ:
1) என்ன நடந்தது?
ஷிப்போல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சுமார் 3 மணி நேரத்தில் MH17 ரேடார் திரையிலிருந்து மறைந்தது. ரஷ்யாவுக்கு ஆதரவான கிளர்ச்சிப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு உக்ரேன் பகுதியில் அவ்வாறு நேர்ந்தது. அங்கு பல மாதங்களாகச் சண்டை நடந்து வந்தது.
விமானத்தின் சிதைவுகள் கிராபோவ் எனும் கிராமத்துக்கு அருகே உள்ள வயல்களில் விழுந்தன. ஆண்கள், பெண்கள், சிறார்களின் உடல்கள் உள்ளூர் சூரியகாந்தித் தோட்டங்களில் சிதறிக் கிடந்தன. சிலர் இருக்கைவார் அணிந்த நிலையில் இருக்கைகளுடன் பிணைக்கப்பட்டிருந்தனர்.
283 பயணிகளில் 196 பேர் நெதர்லந்தைச் சேர்ந்தவர்கள், 38 பேர் ஆஸ்திரேலியர்கள். சிப்பந்திகள் 15 பேர்.
அது, ஒரு சில மாதங்களில் மலேசிய ஏர்லைன்சுக்கு நேர்ந்த இரண்டாவது துயரச் சம்பவம். முன்னதாக அதன் MH370 விமானம் காணாமல் போனது.
2) உலகம் எப்படி எதிர்கொண்டது?
MH17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்திற்கு அனைத்துலக அளவில் கண்டனங்கள் எழுந்தன.
அமெரிக்காவின் அப்போதைய அதிபர் பராக் ஒபாமா, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட BUK ரக, மண்ணிலிருந்து விண்ணுக்குப் பாயும் ஏவுகணை தான் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாகக் கூறினார்.
பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் அந்த ஏவுகணை பாய்ச்சப்பட்டதாக அவர் சுட்டினார். உக்ரேன் அதிபர் பெட்ரோ போரோஷெண்க்கோ அதனைப் பயங்கரவாதச் செயல் என வருணித்தார்.
அந்தக் குற்றச்சாட்டுகளை உடனடியாக மறுத்த மாஸ்கோ, உக்ரேனின் போர் விமானம் அல்லது BUK ரக ஏவுகணை அந்த விமானத்தை வீழ்த்தியிருக்கலாம் என்று கூறியது.
சம்பவத்திற்குப் பிறகு மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதித்தன. 2014 மார்ச் மாதம் கிரைமியாவை உக்ரேனிடமிருந்து ரஷ்யா கைப்பற்றியதை அடுத்து விதிக்கப்பட்ட தடைகள் கடுமையாக்கப்பட்டன.
புலனாய்வில் ரஷ்யா ஒத்துழைக்கக் கோரி, ஐரோப்பிய ஒன்றியம் கடந்த மாதம் தடைகளை நீட்டித்தது.
3) புலனாய்வில் என்ன கிடைத்தது?
கடந்த 5 ஆண்டாக நெதர்லந்து அதிகாரிகள் வழிநடத்திய தீவிரப் புலனாய்வு, சம்பவத்துக்கான காரணத்தையும் அதற்குப் பொறுப்பானவர்களையும் அடையாளங்காண உதவியுள்ளது.
அதிவேகத்தைக் கொண்ட பல பொருள்கள் தாக்கியதைத் தொடர்ந்து MH17 விமானம் வெடித்துச் சிதறியதாக 2014 செப்டம்பரில் டச்சுப் பாதுகாப்பு வாரியம் தெரிவித்தது.
பெரும்பாலும் BUK ஏவுகணை முறையைச் சேர்ந்தவை என நம்பப்படும் பாகங்களை அடையாளங் கண்டுள்ளதாக 2015 ஆகஸ்ட்டில் அது சொல்லிற்று.
மாஸ்கோ, கீவ் இருதரப்பிடமும் அத்தகைய பாகங்கள் உள்ளன.
அதே ஆண்டு அக்டோபரில், கிழக்கு உக்ரேனில் பாய்ச்சப்பட்ட ஏவுகணையால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தெளிவாகியிருப்பதாகப் புலனாய்வுக் குழு அறிவித்தது. ஏவுகணை, விமானத்துக்கு வெளியே விமானி அறையின் இடது கைப் பக்கத்தில் வெடித்ததாகக் கூறப்பட்டது.
அதன் பின் டச்சு அதிகாரிகளின் தலைமையில் 5 நாடுகளைக் கொண்ட குற்றவியல் கூட்டுப் புலனாய்வுக் குழு விசாரணைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டது. 2016 செப்டம்பரில் BUK ரக ஏவுகணை பயன்படுத்தப்பட்டதற்கும் அது ரஷ்யக் கூட்டரசுப் பிரதேசத்திலிருந்து வந்ததற்கும் மறுக்க முடியாத ஆதாரம் கிடைத்திருப்பதாகக் குழு கூறியது.
2018 மே மாதம் ஏவுகணை, மேற்கு ரஷ்யாவின் குர்ஸ்க் நகரைத் தளமாகக் கொண்ட 53ஆவது ரஷ்ய ராணுவப் படைப்பிரிவைச் சேர்ந்தது என்று புலனாய்வாளர்கள் முதல்முறையாகத் தெரிவித்தனர்.
MH17 சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யாவே பொறுப்பு என நெதர்லந்தும் ஆஸ்திரேலியாவும் கூறின.
4) யார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது?
கடந்த மாதம் 19ஆம் தேதி, கூட்டு விசாரணைக் குழு, 4 பேர் மீது குற்றஞ்சாட்டியது. ரஷ்யர்கள் இகோர் கிர்க்கின், செர்கே டுபின்ஸ்க்கி, ஒலேக் புலாட்டோவ், உக்ரேனியர் லியோனிட் கார்ச்சென்க்கோ ஆகியோர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் அனைவரும் கிழக்கு உக்ரேனில் உள்ள பிரிவினைவாதக் கிளர்ச்சியாளர்களுடன் தொடர்புடையவர்கள்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் தேதி நெதர்லந்தில் ஷிப்போல் விமான நிலையத்துக்கு அருகே உயர் பாதுகாப்புக் கொண்ட நீதிமன்றத்தில் அவர்கள் மீதான விசாரணை தொடங்கும்.
எனினும் அவர்கள் அங்கு வருவது சந்தேகமே. ஏனெனில் ரஷ்யாவோ உக்ரேனோ வழக்கை எதிர்நோக்க அதன் குடிமக்களை மற்ற நாடுகளுக்கு அனுப்ப அனுமதிப்பதில்லை.
5) அடுத்து என்ன?
மற்ற சந்தேக நபர்கள் பற்றியும் விசாரிக்கப் போவதாகக் குழு கூறியுள்ளது. குறிப்பாக BUK முறையின் தளபத்தியத்தில் உள்ளவர்களையும் MH17 விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஏவுகணையை இயக்கிய நான்கு பேரடங்கிய குழுவினரையும் அது சுட்டியது.
மற்றொரு நிலவரத்தில், நூற்றுக்கணக்கான உறவினர்கள், சம்பவத்திற்கு ரஷ்யா தான் பொறுப்பு என அறிவிக்கும்படி ஸ்டிராஸ்பர்க்கைத் தளமாகக் கொண்ட ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளனர். அதற்கு ரஷ்யா விரைவில் பதிலளிக்க வேண்டும்.