நஜிப் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கு முடக்கம்
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தமது தனிப்பட்ட வங்கிக் கணக்கு சென்ற வாரம் அதிகாரிகளால் முடக்கப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தமது தனிப்பட்ட வங்கிக் கணக்கு சென்ற வாரம் அதிகாரிகளால் முடக்கப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான படித்தொகை, பஹாங் மாநில முதலமைச்சராகப் பதவி வகித்ததற்கான ஓய்வூதியம் ஆகியவற்றைப் பெறுவதற்கு மட்டுமே அந்தக் கணக்கைத் தாம் வைத்துள்ளதாகத் திரு. நஜிப் கூறினார்.
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டதாகவும் நீதிமன்றத்தில் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அவரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது.
தமது மகளின் மருத்துவச் செலவுகளுக்குச் செலுத்தப்பட்ட காசோலை திரும்பி வந்தபோது தான், தமது தனிப்பட்ட வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதை அறிந்துகொண்டதாகத் திரு. நஜிப் கூறினார்.
தாம் சாதாரணக் குடிமகன் என்றும், குடும்பத் தலைவர் என்ற முறையில் வீட்டுச் செலவுகளைக் கவனிக்க வேண்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வங்கிக் கணக்கு முடக்கத்தால் குடும்பத்தை நடத்துவது தமக்குச் சிரமமாக இருப்பதாய் அவர் கூறினார்.
அதிகாரிகள் நியாயமான, பாகுபாடற்ற புலனாய்வை மேற்கொள்ள அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.