பாசிர் கூடாங் நச்சுவாயுக் கசிவு: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2700க்கும் மேல் அதிகரிப்பு
பாசிர் கூடாங்கில் ஏற்பட்ட நச்சு இரசாயனக் கசிவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,700-க்கும் மேல் அதிகரித்துள்ளது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)
பாசிர் கூடாங்கில் ஏற்பட்ட நச்சு இரசாயனக் கசிவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,700-க்கும் மேல் அதிகரித்துள்ளது.
நேற்றுப் பிற்பகல் நிலவரப்படி, பாசிர் கூடாங்கின் இரண்டு மருத்துவ நிலையங்களில் கிட்டத்தட்ட 1,900 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஜொகூரின் பல்வேறு மருத்துவமனைகளிலும் மருந்தகங்களிலும் மேலும் சுமார் 860 பேருக்குச் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
7 பேர் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நச்சு இரசாயனக் கசிவால் கடந்த வியாழக்கிழமையிலிருந்து பலரும் மருத்துவச் சிகிச்சை நாடி வருகின்றனர்.
சுவாசப் பிரச்சினை, மயக்கம், வாந்தி போன்றவற்றால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாசிர் கூடாங்கில் உள்ள 111 பள்ளிகளையும் மூடுவதற்கு நேற்று முன்தினம் மலேசியக் கல்வி அமைச்சு உத்தரவிட்டது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 92 பாலர்பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.
அங்கு அவசரநிலையை அறிவிப்பதற்கான தேவை இல்லை என அந்நாட்டுப் பிரதமர் மகாதீர் முகமது கூறியிருக்கிறார்.
இருப்பினும் நிலைமையைக் கவனமாகக் கையாளுமாறு அனைத்துத் தரப்பினரையும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர், ஒரு மில்லியன் ரிங்கிட் வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்தையும் வாங்கித் தர, தீயணைப்பு மீட்புத் துறை, காவல்துறை, அரசாங்க அமைப்புகள் ஆகியவை அந்தத் தொகையைப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.